திமுக ஆட்சியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு ஆணை வெளியீடு: ஸ்டாலின் 

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற அரசு ஆணை வெளியிடப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு ஆணை வெளியீடு: ஸ்டாலின் 

ஒட்டப்பிடாரம்: தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற அரசு ஆணை வெளியிடப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் திங்களன்று உரையாற்றினார். அப்போதுஅவர் பேசியதாவது:

தலைவர் கலைஞர் அவர்கள் இந்த தமிழ்நாட்டுக்கு செய்திட்ட திட்டங்களை எல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள். குறிப்பாக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவற்றை நிறைவேற்றியதை எல்லாம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

அதேபோல், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள ஏழு உட்பிரிவுகளை சேர்த்து ஒரே பெயரில் "தேவேந்திரகுல வேளாளர்" என்று பெயரிட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தி.மு.கழக ஆட்சி இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களிடம் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரை அழைத்துப் பேசினார் தலைவர் கலைஞர் அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் கோரிக்கையினை ஆய்வு செய்ய ஒரு நபர் கமிஷன் அமைக்கப்படும் ஜனவரி 2011 ல் அறிவித்தார். அறிவிப்போடு நில்லாமல் உடனே ஒரு நபர் கமிஷன் அமைத்து அரசிதழில் வெளியிட்டார் நமது தலைவர் கலைஞர் அவர்கள்.

ஆனால், அரசு ஆணை வெளியிடுவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் முறையாக என்ன செய்திருக்க வேண்டும், கோட்டையில் ஏற்கனவே இதுகுறித்து இருந்த கோப்புகளை எடுத்து, நிறைவேற்றுகிற முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், குப்பையில் போட்டு விட்டார்கள்.

ஆகவே, இப்போது சொல்கிறேன். கழக ஆட்சி அமைந்ததும் தலைவர் கலைஞரால் நியமிக்கப்பட்ட அந்த கமிஷன் அறிக்கையை, கையில் எடுத்து நீங்கள் விரும்பக்கூடிய வகையில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்ற அரசு ஆணை வெளியிடப்படும் என்கிற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை. 13 பேரை சுட்டுக்கொன்ற கொடுமை. இது எதார்த்தமாக நடந்த சம்பவம் அல்ல. மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்துகொண்டு செய்திட்ட சம்பவம்.  தனியார் கம்பெனியிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்தக் காரியத்தை அவர்கள் செய்தார்கள். இப்போது என்ன நிலை, அண்மையில் உச்சநீதிமன்றம் அந்த ஆலையை திறக்கக்கூடாது என உத்தரவு வந்துவிட்டது. ஆனால், எந்த நிலையிலும் திறக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான், நான் சட்டமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி இதனை கொள்கை முடிவாக எடுக்க வேண்டுமென வலியுறுத்தினேன். அதன் பின்னர், சட்டமன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இதை நான் மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் இன்றைக்கு நிறைவேற்றாத கொடுமை. ஆகவே, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்பதை நீங்கள் மனதில் பதிய வைத்து பணியாற்றுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com