சென்னை: நண்பர் பிரகாஷ் ராஜின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் இருந்து போட்டியிடவுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் சனிக்கிழமை அவர் வெளியிட்ட பதிவில், "எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளேன். எனது புதிய பயணத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இதுதொடர்பான தகவல்களை அடுத்த சில தினங்களில் ஊடகங்களிடம் முறையாக அறிவிப்பேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் நண்பர் பிரகாஷ் ராஜின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
எனது நண்பர் பிரகாஷ் ராஜூக்கு அவரது அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். தான் கூறியபடியே நடந்து கொள்வதற்கு நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.