சயன், மனோஜ்-க்கு ஜாமீன்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

கொடநாடு தொடர்பாக வெளியான விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜ்-க்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சயன், மனோஜ்-க்கு ஜாமீன்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு


கொடநாடு தொடர்பாக வெளியான விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜ்-க்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது. மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கியது. 

பின் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே கார் விபத்தில் இறந்தார்.

இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை தொடர்பான தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு விடியோ காட்சித் தொகுப்பை கடந்த 11-ஆம் தேதி வெளியிட்டார்.

இந்த விடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாக அந்த விடியோவில் பேட்டியளிக்கும் சயன், மனோஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ராஜன் சத்யா புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகியோர் மீது  3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார், புது தில்லிக்கு சென்றனர். அங்கு சயனையும், மனோஜையும் உடனடியாக கைது செய்தனர்.

பின்னர் 3 பேரையும் போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து  மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் டி.எஸ்.அன்பு தலைமையிலான போலீஸார் பல கட்டங்களாக 11 மணி நேரம் விசாரணை செய்தனர். 

இதையடுத்து, திங்கள்கிழமை நள்ளிரவு சைதாபேட்டை நீதிபதி வீட்டில் சயன், மனோஜ்  இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். விசாரணையில் போதிய ஆதாரம் இல்லாததால் சயன், மனோஜ்  இருவரையும் விடுவித்து நீதிபதி சரிதா உத்தரவிட்டார் . மேலும் இருவரையும் வரும் 18-ம் தேதி ரூ.10 ஆயிரம் பிணையுடன் ஆஜராக  உத்தரவிட்டார். 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 
அப்போது, சயன் மற்றும் மனோஜ் தனிநபர் ஜாமீன் உத்தரவாதம் தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்தனர். மேலும், ரூ.10,000 பிணைத் தொகையையும் செலுத்தினர். இதையடுத்து, இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. 

மேலும், பிணைத்தொகை தொடர்பான சில ஆவணங்களை தாக்கல் செய்ய வரும் திங்கள்கிழமை ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com