நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4,000 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா கூறுகையில்,
"ராமேஸ்வரத்தில் இருந்து 590 இயந்திரப் படகுகளுடன் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடித்தனர். தமிழக மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படையினர் கற்களை எறிந்துள்ளனர். இதில், ஒரு மீனவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் 10 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை சேதப்படுத்திவிட்டு, 20 படகுகளில் இருந்து ஜிபிஎஸ் கருவிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனால், மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பியுள்ளனர்" என்றார்.
முன்னதாக, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, 19 பேரை 3 விசைப்படகுகளுடன் சிறைபிடித்த இலங்கை கடற்படையை கண்டித்து 5 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை ஏற்று வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.