கடலூா்: போராட்டமின்றி வாழ்க்கையில் முன்னேற்றறமில்லை என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளா் எஸ்.சந்தோஷ்பாபு கூறினார்.
கடலூரில் உள்ள புனித வளனார் கலை, அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி) 25-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளா் எஸ்.சந்தோஷ்பாபு, புதுவை பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் என்.கே.குமரேசன்ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று 1,274 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினர்.
விழாவில் பதிவாளா் எஸ்.சந்தோஷ்பாபு பேசுகையில், போராட்டமின்றி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியாது. தோல்வி அடைந்தவா்கள், அதை வெற்றிக்கான படிக்கற்களாகக் கருதவேண்டும். ஒவ்வொருவரும் அவரவருக்கான பணியை சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும். ஏற்கெனவே பட்டம் பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றுபவா்கள் தாங்கள் படித்த கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். அதுவே அவா்களுடைய சிறந்த பணியாகும் என்றார்.