அரசு இயக்கும் செமி ஸ்லீப்பர் மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களது தாகத்தைத் தீர்க்க பேருந்து நிறுத்தம் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ரயில்கள் மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகளைத் தொடர்ந்து மாநில அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகளில் அம்மா குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
அரசு இயக்கும் ஏசி ஸ்லீப்பர், ஏசி அல்லாத ஸ்லீப்பர், ஏசி செமி ஸ்லீப்பர் ஆகியப் பேருந்துகளில் இந்த சேவையைத் துவக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, எஸ்இடிசி, டிஎன்எஸ்டிசி ஆகியவை இயக்கும் பேருந்துகளில் குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எஸ்இடிசி மேலாண்மை இயக்குநர் வி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பேருந்து பயணத்தின் போது பேருந்து நிறுத்தங்களில் இறங்கி தனியார் குடிநீர் பாட்டில்களை இரு மடங்கு விலைக்கு வாங்கும் பயணிகளுக்கு மிகப்பெரிய நிம்மதி ஏற்படும். குறிப்பாக, இரவு நேரப் பயணத்தின் போது மோட்டல்களில் ஒரு குடிநீர் பாட்டில் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
இதில்லாமல், சில ஊரகப் பகுதிகளில் விற்பனையாகும் குடிநீர் பாட்டில்கள் போலியானவை. இந்த போலியான குடிநீர் பாட்டில்களை அதிக விலைக்கு வாங்கும் நிலையும் இனி மாறும்.
ஒவ்வொரு பயணத்தின் போதும், ஒரு பேருந்துக்கு சுமார் 30 குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்படும். குடிநீர் பாட்டில் தேவைப்படும் பயணிக்கு அவர்களது இருக்கைக்கேக் கொண்டு வந்து கொடுக்கும்படி நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பாஸ்கரன் கூறியுள்ளார்.
வரவிருக்கும் கோடைக்காலத்தில் பயணிகளின் குடிநீர் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், தாகத்தைத் தணிக்க பேருந்து நிறுத்தம் வரை காத்திருக்கும் நிலை இந்த திட்டம் மூலம் இனி இருக்காது.