சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து


சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா கொண்டாட்டத்தை சீர் குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல்துறை அதிகாரிள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். 

சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பேருந்து நிலையங்கள், கோயில் வழிபாட்டு தலங்கள், கடற்கரை, திரையரங்குகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் வருகிற 31 ஆம் தேதி நள்ளிரவு வரை பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மேலும், பாதுகாப்பு கருதி விமான நிலையம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். விமான நிலையத்தில் சோதனை பலப்படுத்தப்பட்டு இருப்பதால் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையம் வந்து சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com