ஆவணப் பதிவின் போது, கட்டணங்களைச் செலுத்தும் வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத் துறைத் தலைவர் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
ஆவணப் பதிவுக்கு தனி மென்பொருள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் நடைமுறையால், அனைத்து வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை முறைகளில் பதிவுத் துறைக்கான கட்டணங்களைச் செலுத்தலாம்.
இம்முறையின் மூலமாக, அனைத்து வங்கிகளின் பற்று அட்டை, கடன் அட்டை, யுபிஐ போன்றவற்றின் மூலமாக பதிவுத் துறைக்கான கட்டணங்களைச் செலுத்த வழி செய்யப்பட்டுள்ளது. பதிவுத் துறையின் இணையதள வழி செலுத்துச் சீட்டைத் தயாரித்து கட்டணங்களை பாரத ஸ்டேட் வங்கி, அலகாபாத், இந்தியன் ஓவர்சீஸ், இந்தியன் வங்கி, ஐ.டிபி.ஐ., சிண்டிகேட், சென்ட்ரல் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கிகளின் எந்தக் கிளையிலும் கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும், ரொக்கமாக அலுவலகத்தில் ஆயிரம் ரூபாய் வரையிலும், ரூ.5 ஆயிரம் வரையில் வரைவோலை வழியாகவும் செலுத்தலாம். எனவே, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி ஆவணதாரர்கள் பாதுகாப்பான முறையில் கட்டணங்களைச் செலுத்தலாம். இதில், சந்தேகங்களோ அல்லது சிரமங்களோ இருந்தால் பதிவுத் துறை தலைவர் அலுவலக கட்டணமில்லாத தொலைபேசி எண் 1800 102 5174-ஐத் தொடர்பு கொள்ளலாம்.