இந்திய மக்களின் வாழ்வு மேம்பட ஆட்சிமாற்றம் அவசியம் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி.
திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள லெனின் சிலையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த மாவட்டத்தில் புரட்சியாளர் லெனின் சிலை திறக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது.
சர்வதேச அளவில் இன்றைய சூழலிலும் சமூகத்தில் சுரண்டலற்ற நிலையை உருவாக்க முடியும் என்பதற்கு லெனின் கருத்துகள் உதவும். மோடி தலைமையிலான மத்திய அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக உள்ளது.
வளம் மிகுந்த இந்தியாவில் வாழ்வாதாரம் சிதையும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையை மாற்ற விவசாயிகள், தொழிலாளர்கள் ஒன்றிணைய வேண்டும். தனிமனிதரான தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணிதிரண்டுள்ளதாக பிரதமர் கூறுகிறார். அது தவறானதாகும். ஏனெனில், மத்திய அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை மக்கள்தான் ஒன்றிணையச் செய்துள்ளனர். இந்திய மக்களின் வாழ்வு மேம்பட ஆட்சிமாற்றம் அவசியமாகும்.
தமிழகத்தில் தனது கூட்டாளிகளை உருவாக்கி பாஜக காலூன்ற பார்க்கிறது. அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. வேற்றுமையில் ஒற்றுமையையும், சமூக நீதியையும் தமிழகத்தில் உருவாக்கியதில் திராவிடத்தின் பங்கு அளப்பரியது. அத்தகைய பாரம்பரியத்தைக் காக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாத நிலையில், இப்போது புதிய புதிய வாக்குறுதிகளை கூறி வருகிறார். இந்தியாவில் இருந்து மோடி அரசையும், தமிழகத்தில் இருந்து அதிமுக அரசையும் அப்புறப்படுத்த அனைத்துத்தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் உ.வாசுகி, கனகராஜ், முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி, திருநெல்வேலி மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.