கஜா புயல் நிவாரணமாக இதுவரை பெற்றுள்ள தொகை, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை, எந்த அடிப்படையில் ஒவ்வொரு பாதிப்புக்கும் நிவாரணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பன போன்ற விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க துரித நடவடிக்கை, இழப்பீடுகளை உயர்த்தி வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், திருச்சியைச் சேர்ந்த தங்கவேல், மேலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 1146.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கஜா புயல் நிவாரண நிதியாக இதுவரை எவ்வளவு தொகை பெறப்பட்டுள்ளது? பெறப்பட்ட தொகையில் எவ்வளவு தொகை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது? எந்த அடிப்படையில் ஒவ்வொரு பாதிப்புக்கும் நிவாரணத் தொகை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது? என்பன குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.