ஸ்டெர்லைட் நிறுவனம் புதிய மனு தாக்கல்: நாளை விசாரணை

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்


ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வியாழக்கிழமை (ஜனவரி 24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா அடங்கிய அமர்வில் இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வேதாந்தா குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரோஹிணி மூஸா முறையிட்டார். இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆலை செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசுக்கும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக வேதாந்தா குழுமத்துக்கும் நோட்டீஸ் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது; ஜனவரி 21-ஆம் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த டிசம்பர் 21-இல் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே, இந்த புதிய மனுவை ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com