சென்னை: தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதலமைச்சர் பதவியை கைப்பற்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிலநாட்களுக்கு முன்னர் குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை உனடக்கியது.
ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன்; யாகம் நடத்தவில்லை என்றார்.
இந்நிலையில் தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனூர் ஜெகதீசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்துள்ள இம்மனுவில், உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்ததையொட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.