ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான (டெட்') உத்தேச விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (தாள் 1, தாள் 2) கடந்த ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தேர்வை 5.88 லட்சம் பேர் எழுதினர். இதையடுத்து தேர்வுகளுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைக் குறிப்புகள் (Tentative Key Answers) பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு www.trb.tn.nic என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக் குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் ஜூலை 15-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
ஒவ்வொரு வினாவுக்கும் தவறாமல் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்களில் உள்ள ஆதாரங்களை மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.