தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள எல்லை மாவட்டங்களில் வெள்ளி, சனி (ஜூலை 19, 20) ஆகிய இரண்டு நாள்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய திருநெல்வேலி, தேனி, கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 18) கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதைத் தொடர்ந்து, வெள்ளி, சனி (ஜூலை 19, 20) ஆகிய இரண்டு நாள்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் 120 முதல் 200 மி.மீ. வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 21) தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.