சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் நகல்களை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் பிற மாநில மொழிகளிலும் வெளியிட்டு மிகப்பெரிய சாதனையை செய்ததற்கு தமிழக மக்களின் சார்பில் தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதிமன்றத் தீர்ப்புகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான இந்த முயற்சியானது தொடர்ந்து நடைபெற வேண்டும். இதன்மூலமாக, சட்ட அமைப்பானது சாதாரண, சாமானிய மக்களுக்கு மிக அருகில் எடுத்துச் செல்லப்படும்.
இந்த சிறந்த முயற்சியை மேற்கொண்டதற்காக தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் இந்தத் தருணத்தில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் நகல்களைத் தமிழில் வெளியிட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.