சென்னை: பாஜக வின் வன்முறை கடும் கண்டனத்திற்குரியது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்திற்கு உரிய மதிப்பளிக்காத, ஜனநாயக நெறிமுறைகளை ஏற்காத வன்முறை கட்சி பாஜக என்பதனை மீண்டும் - மீண்டும் நிருபித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
பிரதமர், முதலமைச்சர் போன்றவர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் அமைப்புகள் கறுப்புக் கொடி காட்டி, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவது என்பது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
ஆயுதங்கள் இன்றி போராட்டம் நடத்திட அரசியல் அமைப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது.
நாட்டின் பிரதமர் தமிழகத்திற்கு இழைத்த அநீதிகள் - துரோகங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாகவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், பிரதமர் வரும் இடங்களில் ஜனநாயக முறையில் அமைதியான முறையில் கறுப்புக் கொடி காட்டி வருகின்றனர்.
திருப்பூரில் கறுப்புக் கொடி காட்டிய போது, ஒரு பெண்ணை அனுப்பி பாஜக வினர் செருப்பை வீச செய்துள்ளனர். இது குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று 01.03.2019 காலை குமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக, மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ தலைமையில் கறுப்புக் கொடி காட்டிய போது. பாஜக வினர் காவல்துறையினர் முன்னிலையில் மதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பாட்டில்களையும், கற்களையும் எடுத்து வீசியுள்ளனர்.
பாஜக வின் இத்தகைய ஜனநாயக விரோத வன்முறை செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையில் ஈடுபட்ட பாஜக வினர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் இரத்தகளறி ஏற்படுத்த பாஜக வினர் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத செயலுக்கு மாநில அரசு துணை போவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.