சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன், பேஸ்புக் மூலம் பேசி, பழகி, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு என்னும் வாலிபன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களில் சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார் உட்பட 7 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் புகார் அளித்த 19 வயது கல்லூரி மாணவியின் சகோதரரைத் தாக்கிய மூவர்
பிணையில் வெளிவந்து விட்டனர். பின்னர் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் தொடர்புடையவரும் ,பெண்ணின் சகோதரரைத் தாக்கியவருமான அதிமுக பிரமுகர் 'பார்' நாகராஜ் என்பவரை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமையைகம் திங்கள் மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எதிர்கட்சிகள் தரப்பு மற்றும் இந்த சம்பவத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்புக் குரலையடுத்து இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அதேநேரம் இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்திருப்பதாக, செவ்வாயன்று தகவல் வெளியானது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக பல்வேறு விடியோக்கள் வெளியாகி வருகின்றன. எனவே இந்த சம்பவத்தில் காவல்துறை இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.