நோட்டாவோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு ஐந்து சீட்டா?: கொந்தளித்த ராஜகண்ணப்பன் 

நோட்டாவோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு ஐந்து சீட்டா? என்று அதிமுக தலைமையை நோக்கி முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நோட்டாவோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு ஐந்து சீட்டா?: கொந்தளித்த ராஜகண்ணப்பன் 

சென்னை: நோட்டாவோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு ஐந்து சீட்டா? என்று அதிமுக தலைமையை நோக்கி முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதாவின்  அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை வகித்தவர் ராஜகண்ணப்பன்.

பின்னர் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் காங்கிரசின் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்ட அவர் 3,354 ஓட்டுகள் வித்தியாசத்தில் நூலிழையில் தோற்றார்.

தற்போது 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுரம் அல்லது மதுரை தொகுதியை அவர் எதிர்பாத்துக் காத்திருந்தார்.   ஆனால் அதிமுக கூட்டணியில் சிவகணகை மற்றும் ராமநாதபுரம் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதுரை தொகுதி ராஜகண்ணப்பனனுக்கு கிடைக்கக் கூடாது என்று சில அதிமுக அமைசசர்கள் லாபி செய்ததாக கூறப்படுகிறது.   

எனவே சீட் கிடைக்காத அதிருப்தியில், ராஜகண்ணப்பன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தரத் தயாராகியுள்ளதாக திங்கள் காலை தகவல் வெளியாகியது.   

இந்நிலையில் நோட்டாவோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு ஐந்து சீட்டா? என்று அதிமுக தலைமையை நோக்கி முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திங்கள் மாலை சந்தித்து ராஜகண்ணப்பன், திமுக கூட்டணிக்கு தனது  ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

அதிமுகவில் தற்போது உட்கட்சிப்பூசல் நிறைய உள்ளது. ஒரு குடும்பத்திற்காக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், இப்போது மகனுக்காக சீட் வாங்க போராடியது ஏன்?   ஓ.பன்னீர்செல்வம் தூரோகம் செய்துவிட்டார். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டனர்.

அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லோரும் தொண்டர்கள் இல்லை. திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தமிழகத்தில், நோட்டாவையே வெற்றி கொள்ள முடியாத பா.ஜனதாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? தென்மாவட்டங்களில் அவர்கள் கேட்கின்ற 4 தொகுதிகளை அப்படியே பா.ஜனதாவிற்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அதிமுகவில் இப்போதைய தலைவர்கள் கைகளை கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். நான் திமுக கூட்டணியை ஆதரித்து மதுரையில் பிரசாரம் செய்வேன். தேவைப்பட்டால் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாகக் கூட பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com