தமிழ்நாடு

கலைஞரின் பிறந்தநாளன்று மோடியின் ஆட்சி முடிவுக்கு வரும்: திருவாரூரில் ஸ்டாலின்

DIN

திருவாரூர்: கலைஞரின் பிறந்தநாளன்று மோடியின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று திருவாரூரில் புதனன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதனன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தனது தேர்தல் பிரச்சாரத்தை கருணாநிதி பிறந்த திருவாரூர் மண்ணில் தொடங்கினார். காலை திருவாரூர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தி.மு.க மற்றும் நாகை நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு வாக்குகளைச் சேகரித்தார்.

பின்னர், அந்தப் பகுதியில் நடைபெற்ற மகளிர் கருத்து கேட்பு கூட்டத்திலும் கலந்துகொண்டு மகளிரின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நடைபெற்ற பிரச்சார தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:

தேர்தல் களத்தில் என்னுடைய பிரச்சார பயணத்தை முதற்கட்டமாக நான் இந்த திருவாரூர் தொகுதியில் தொடங்கி இருக்கிறேன். ஏனென்றால் இது தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவுக்குத் தலைநகர் டெல்லி. தமிழ்நாட்டுக்குத் தலைநகர் சென்னை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தலைநகர் இந்தத் திருவாரூர். காரணம் தலைவர் கலைஞர் அவர்களை ஈன்றெடுத்த ஊர் இந்த ஊர். பள்ளி மாணவனாக நம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திட வேண்டுமென போர்ப்பரணி பாடிய தலைவர் கலைஞர் பிறந்த ஊர் இந்த ஊர்.

மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியின் கெடு வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி முடிவடைகிறது. தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி. எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது என்பதை நாம் மறைத்திட மறுத்திட முடியாது.

இதே திருவாரூரில் தான் தலைவர் அவர்கள் இறுதியாகப் போட்டியிட்டார்கள். நியாயமாக திருவாரூரில் வாக்கு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. இருந்தாலும் நீங்கள் கேட்பீர்கள், நம்ம ஊர் பிள்ளை ஊர் ஊராக சுற்றுகிறது, நம்ம ஊருக்கு வரவில்லையே என நீங்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான், நான் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.

பூண்டி கலைவாணன் அவர்கள் திருவாரூர் சட்டமன்றத்தின் வேட்பாளராக நிற்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கதிர் அருவாள் சின்னத்தில் தோழர் செல்வராஜ் அவர்கள் நாகை நாடாளுமன்ற வேட்பாளராக நிற்கிறார். செல்வராஜ் அவர்களும், பூண்டி கலைவாணன் அவர்களும் உருவத்தால் மாறுபாடு கொண்டிருக்கலாம். ஆனால், உணர்வால் அவர்கள் ஒன்றுபட்டவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகள். நான் சகோதரன் சகோதரன் என்று சொல்வதால் அவர்கள் கலைஞரின் பிள்ளைகள் என்று சொன்னாலும் தவறில்லை. ஆகவே, இந்த சகோதரர்களுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

மத்தியிலே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாசிச மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும், ஆனால், அதேநேரத்தில் மாநிலத்தில் நடைபெறக்கூடிய மத்திய அரசினுடைய கொத்தடிமையாக எடுபிடியாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எடப்பாடி ஆட்சியையும் சேர்த்து விரட்டிட விடை காண வேண்டும் என்ற உணர்வோடு நான் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்

துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓ பன்னீர் செல்வம் தலைமையில் பதினொரு சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆட்சி இருக்கக் கூடாது என்று சட்டமன்றத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தவர்கள். ஆனால் அவர்களுடைய பதவி இன்றைக்கும் இருக்கிறது. இதுதான் வேடிக்கை. ஆகவே, அந்த பிரச்னையும் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. விரைவில் தீர்ப்பு வரப் போகிறது. அப்படி வருகிற நேரத்தில் உறுதியாகச் சொல்லுகிறேன். அந்த தீர்ப்பு வரக்கூடிய நேரத்தில் இந்த 18 தொகுதிகளின் முடிவுகளும் வரப்போகிறது. அப்போது மோடி ஆட்சி மட்டுமல்ல தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியும் அகற்றக்கூடிய நிலை வரும். வந்தே தீரும். ஆகவே தான், நீங்கள் இந்த தேர்தலை சிறப்பான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உங்களை கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்போது தோழமைக் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி உருவாகி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயரிலேயே இன்றைக்கு நாம் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறோம், ஈடுபட்டிருக்கிறோம். முத்தரசன் இன்னொன்றையும் சொன்னார், 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை எங்களுக்கு கொடுத்துவிட்டு வெறும் 20 தொகுதிகளில் தி.மு.க நிற்கிறது என்று சொன்னார். மன்னிக்கவும், உங்கள் தொகுதிகளிலும் நாங்கள் தான் நிற்கிறோம்.

உங்கள் என்று கூட சொல்ல கூடாது நம் தொகுதி அது. அதை நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை. பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இரண்டு வருட காலமாக ஒன்றாகத்தான் இருக்கிறோம். இந்த இரண்டு வருடம் மட்டுமல்ல, இனி வரப்போகும் வருடங்களிலும் நாங்கள் சேர்ந்து தான் இருக்கப் போகிறோம், ஒருங்கிணைந்து தான் பணியாற்றுகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. எல்லாத் தொகுதிகளிலும் தி.மு.க தான், எல்லாத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தான், எல்லாத் தொகுதிகளிலும் ம.தி.மு.க தான், எல்லாத் தொகுதிகளிலும் சி.பி.ஐ தான், எல்லாத் தொகுதிகளிலும் சி.பி.எம் தான், எல்லாத் தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் தான், எல்லாத் தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தான், இப்படி கொள்கை கூட்டணியாக நாங்கல் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.

ஆனால், இன்றைக்கு பேரத்தின் அடிப்படையிலேயே சில பேர் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். இங்கேயும் பேசிவிட்டு அங்கேயும் பேசிவிட்டு என்னென்ன கூத்து அடித்தார்கள்? எப்படி எல்லாம் பேரம் பேசினார்கள்? எவ்வளவு அசிங்கமான அரசியலை நடத்தி இருக்கிறார்கள்?

‘ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்னாரே மோடி. அவர் ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார். ஊழலில் திளைத்து இன்றைக்கு ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டு சேர்ந்து இருக்கிறாரே இதை விட வேற என்ன வெட்கக்கேடு இருக்க வேண்டும்? மோடி அவர்களே, யாரோடு கூட்டணி வைத்திருக்கிறீர்கள்? இதையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் தான். ஆனால் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை என அத்தனை துறையும் அவர் இடத்தில் தான் இருந்தது. அந்தத் துறையிலேயே ஏறக்குறைய ஏறக்குறைய 3000 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் விட்டு அதில் ஊழல் நடந்திருக்கிறது என்று நம்முடைய அமைப்புச் செயலாளர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆர் எஸ் பாரதி அவர்கள் ஆதாரத்தோடு நீதிமன்றத்திற்குச் சென்றார்.

நம்மை விட கேவலமாக அ.தி.மு.கவை அ.தி.மு.கவின் ஊழல்களை பேசிய கட்சி எதுவென்று கேட்டால் பாட்டாளி மக்கள் கட்சி. அந்தக் கட்சியின் பெயரை சொல்லிக் கூட அவர்களுக்கு விளம்பரம் தேடித் தர நான் விரும்பவில்லை. அவர்களைப் பற்றி பேசி இந்த மேடைக்கு இருக்கின்ற தராதரத்தை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை

அ.தி.மு.கவின் ஊழல் என்ற தலைப்பில் ஒரு புத்தகமே போட்டு கவர்னரிடம் மனு கொடுத்தார்கள். யார் யார் எந்த அமைச்சர்கள் எந்தெந்த துறையில் எவ்வளவு ஊழல்கள் செய்திருக்கிறார்கள் என்று கவர்னரிடத்திலே புகார் கொடுத்தார்கள். ஆனால் அவர்களோடு இன்றைக்கு கூட்டணி வைத்திருக்கிறார்கள். நீங்கள் எந்தக் கூட்டணி அமைத்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கக்கூடிய இந்தக் கூட்டணி கொள்கைப் பிடிப்போடு லட்சியத்தோடு அமைந்திருக்கக்கூடிய கூட்டணி, இந்தக் கூட்டணியின் நாகப்பட்டினம் நாடாளுமன்ரத் தொகுதியின் வேட்பாளராக நம்முடைய செல்வராஜ் அவர்களும், திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளராக பூண்டி கலைவாணன் அவர்களும் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் வானத்தைக்கீறி வைகுண்டத்தை காட்டுகிறேன் என்று மோடி சொன்னாரோ, அதேபோல பல பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வர பார்க்கிறார். நான் கேட்கிறேன் உறுதிமொழி தந்து மக்களை ஏமாற்றி மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அந்த உறுதிமொழிகளில் ஏதாவது ஒன்றையாவது காப்பாற்றியிருக்கிறாரா?

இதே விவசாயப் பெருங்குடி மக்களின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்தி காட்டுவேன் என்று சொன்னாரே மோடி, செய்து காட்டினாரா?

இந்தியாவின் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவேன் என்று சொன்னாரே மீட்டுக் கொண்டு வந்தாரா?

அப்படி மீட்டுக் கொண்டுவருகிற கருப்பு பணத்தை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அவருடைய வங்கிகளில் வைப்புத் தொகையாக 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன் என்று சொன்னாரே, செய்தாரா?

இதுவரைக்கும் அந்த உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை. இரண்டு கோடி இளைஞர்களுக்கு படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்று சொன்னாரே, செய்தாரா? இப்போது அதேபோல் தேர்தல் வந்து விட்ட காரணத்தினால் சொல்லத் தொடங்கியிருக்கிறார். அண்மையில் தமிழ்நாட்டிற்கு இரண்டு மூன்று முறை வந்து சென்றுவிட்டார்.

ஏதாவது திறப்பு விழா நிகழ்ச்சி நடந்ததா? நான் கேட்கிறேன், எங்காவது திறப்பு விழா நிகழ்ச்சி நடந்ததா? அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார். ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து முடிகின்ற நேரத்தில் இப்பொழுதுதான் அவர் அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு. முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் மீது வழக்கு. இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி. இன்றைக்கு இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு ஒரு கூட்டணி அமைத்து இருக்கிறார்கள் என்று சொன்னால் மக்களை ஏமாற்றுவதற்காகவும் ஊழல் செய்வதற்காகவும்தான்.

நேற்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகுதான் நான் இந்த திருவாரூருக்கு வந்தேன். நாம் வெளியிட்ட அதே நேரத்தில் தான் அ.தி.மு.கவும் வெளியிட்டது. ஆட்சியில் இருந்த போதெல்லாம் ஜெயலலிதாவாக இருந்தாலும் இப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் ஆட்சியில் இருக்கின்ற போது மக்களுக்கு எதையும் செய்யாமல் தேர்தல் வருகிறது என்கிற ஒரே காரணத்துக்காக தற்போது அவசர அவசரமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். நிறைய விஷயங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

அதனால்தான் தலைவர் கலைஞர் சொன்னார், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டுவார் “சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்” என்றால் சொல்லாததையும் செய்து காட்டுகிற தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நூறு தலைப்புகளில் நூறு பிரச்னைகளை மையமாக வைத்து இந்தத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால் விவசாயப் பெருங்குடி மக்களைப் பொறுத்தவரைக்கும் சிறு குறு விவசாயிகளுடைய கடன், இதில் கூட ஒரு பிரச்னை வந்தது. வெளியிட்ட நேற்று வந்ததற்குப் பிறகு, அண்ணன் முத்தரசன், நம்முடைய வேட்பாளர் செல்வராஜ், கலைவாணன் மற்றக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தொலைபேசியில் பேசினார்கள். சிறு குறு விவசாயிகள் என்று போட்டிருக்கிறீர்கள், ஒட்டுமொத்த விவசாயிகள் என்று போடுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள். உடனடியாக நான் சென்னைக்கு அந்த அறிக்கை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக அதிலே ஒரு திருத்தம் போட்டு நாளைக்கே அந்த செய்தி வெளி வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். சிறு குறு விவசாயிகள் அல்ல ஒட்டுமொத்த விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துவிட்டு தான் இந்த மேடைக்கு வந்து இருக்கிறேன்.

ஜனவரி மாதம் ஊராட்சி சபைக் கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நாம் நடத்திக் காட்டினோம். நானே பல ஊர்களுக்கு சென்று கிராமங்களுக்குச் சென்று மக்களிடத்தில் சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டேன்.

இதுவரைக்கும் இந்திய வரலாற்றில் எந்தக் கட்சியும் ஊராட்சிகளுக்குச் சென்று குறைகளை கேட்டதாக வரலாறு இல்லை. அந்த வரலாற்றை பெற்ற ஒரே கட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.

ர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்டு இருக்கக்கூடிய அத்தனையும் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றும், நிறைவேற்றும் அந்த உறுதியை நாங்கள் காப்பாற்றித் தர வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஒட்டுமொத்தமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான திரு பூண்டி கலைவாணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதேபோல் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் செல்வராஜ் அவர்களுக்கு கதிர் அருவாள் சின்னத்தில் நீங்கள் ஆதரவு தந்து வெற்றியை தேடித் தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT