திண்டுக்கல்: நரேந்திர மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் கூட்டங்களில் பேசும்போது எதையாவது தொடர்பில்லாமல் பேசுவது சமீப காலங்களாக வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் நரேந்திர மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் புதன் இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் சீனிவாசன் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆதரவாக உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, 'மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்; அதேபோல நரேந்திரன் மோடியின் பேரன் ராகுல் காந்தியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்' என்று தெரிவித்தார்.
இந்திராவின் பேரன் ராகுல் காந்தி என்பதற்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று அவர் தவறுதலாகக் கூறினார் இது அதிமுக-வினர் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது.
மேலும் சமூகவலைதளங்களில் பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் மத்தியில் அமைச்சரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.