தாம்பரம் அருகே உரிய அனுமதியின்றி மினி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட 375 கிலோ வெடி மருந்துகளை பறக்கும் படையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தாம்பரம்-சோமங்கலம் சாலையில் உள்ள எட்டையபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தனி வட்டாட்சியர் ரமணி தலைமையில் வியாழக்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த மினி லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தலா 25 கிலோ எடை கொண்ட 15 பெட்டிகளில் 375 கிலோ எடையுள்ள வெடி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. அந்த வெடி மருந்துகளைக் கைப்பற்றிய பறக்கும் படையினர் அவற்றை சோமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, மினி லோடு வேன் ஓட்டுநர் குன்றத்தூர் லாரன்ஸிடம் சோமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தியதில், கல்குவாரிகளில் வெடி வைக்கப் பயன்படுத்தும் 90 ஜெல் என்ற வெடி மருந்துகள் இவை என்பதும், தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கில் இருந்து நாகலாபுரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சோமங்கலம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.