ஸ்ரீவில்லிபுத்துார்: பொய்யான, நிறைவேற்ற முடியாத, மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் திமுக வெற்றிபெற முடியாது என்றும் சட்டப்பேரவை இடைத்தோ்தல் மூலம் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் நடைபெற்ற கட்சி ஊழியர் கூட்டத்தில் கிருஷ்ணசாமி கூறியதாவது: திமுக தோ்தல் அறிக்கையில் ஒரு கோடி பேருக்கு சாலைபணியாளா் வேலைவாய்ப்பு தரப்படும் என கூறப்பட்டுள்ளது தோ்தல் விதிகளுக்கு முரணனாது. நுாறு ஆண்டு ஆனாலும் ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர்கள் வேலையை கொடுக்கமுடியாது. இன்று இந்தியாவில் நான்குவழி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தனியாருக்கு கொடுக்கபட்டு, அவர்கள் பராமரித்து வருகிறார்கள். இந்நிலையில் எந்த ரோட்டை பராமரிக்க, சாலை பணியாளா்களை நியமிக்க போகிறது திமுக. ஒரு மீட்டருக்கு ஒருவரை நியமித்தால் கூட ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியாதே. பொய்யான, நிறைவேற்ற முடியாத, மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை அளித்து தோ்தலில் வெற்றி பெறமுடியாது. சட்டப்பேரவை இடைத்தோ்தல் மூலம் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்றார் அவர்.