கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை? என பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வனப்பகுதிகளில் அடிக்கடி அதிகளவில் தீ விபத்து ஏற்படுபடுவதாகவும் இதனால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவதாகவும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்விற்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை? வனப்பகுதிகளில் தீ விபத்தை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? நடப்பட்ட மரங்களை காப்பாற்றுவதற்கு போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட்டதா? உலக வங்கி மூலம் பெறப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது. நிதி மூலம் நடப்பட்ட மரங்கள் எவ்வளவு ? நடப்பட்ட மரங்களில் எவ்வளவு உயிருடன் இருக்கின்றன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
மேலும் இதுதொடர்பாக மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்டம் வாரியாக மாநில அரசும் ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.