கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான, மத்திய நிதி, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாவட்ட ஆட்சியரும், தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரசாந்த் மு.வடநேரேவிடம், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ், குமரி மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன், தேமுதிக மாவட்டச் செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் இருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகப் புறப்பட்டார். அவருடன், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (குமரி கிழக்கு), ஜான் தங்கம் (குமரி மேற்கு), தோவாளை ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார், நாகர்கோவில் நகர அதிமுக செயலாளர் சந்துரு, பாஜக மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமன், மேலிடப் பார்வையாளர் தேவ், பாமக மாநிலத் துணைத் தலைவர் ஹில்மென் புரூஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும் மூவர்: மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் எபனேசர், தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் சார்பில் தங்கப்பன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜெயின்டீன் ஆகியோரும் வெள்ளிக்கிழமை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.