சென்னை மாவட்டத்திலுள்ள மூன்று மக்களைவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், பெரம்பூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட அதிமுக , திமுக வேட்பாளர் உள்பட 18 பேர் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகள், பெரம்பூர் சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செவ்வாய்க் கிழமை (மார்ச் 19) தொடங்கியது.
கடந்த 3 நாள்களாக வேட்புமனு தாக்கல் மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக, தேமுதிக வேட்பாளர்களும், திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 18 பேர் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தென் சென்னை: அதிமுக சார்பில் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஏ.ஜே.ஷெரின், சுயேச்சை வேட்பாளர்கள் எஸ்.பார்த்தீபன், கே.ஜெயராமன், எஸ்.பாலு ஆகியோர் தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
வடசென்னை: தேமுதிக சார்பில் அழகாபுரம் ஆர்.மோகன் ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் பி.காளியம்மாள் ஆகியோர் தேர்தல் அலுவலர் எஸ்.திவ்யதர்ஷினியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மத்திய சென்னை: பாமக சார்பில் எஸ்.ஆர்.சாம்பால், மாற்று வேட்பாளராக வி.ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில்
ஆர்.கார்த்திகேயன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.பார்த்தசாரதி ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பெரம்பூர் இடைத் தேர்தல்: பெரம்பூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் ஆர்.டி.சேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் செ.மெர்லின் சுகந்தி, பு.கீதா, சுயேச்சை வேட்பாளர்கள் ச.ஜெயராஜ், கே.எஸ்.கணேசன், கு.ராஜேஷ், செ.மோகன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
தென் சென்னை மக்களவை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார் அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன்.