திருப்பரங்குன்றம் பங்குனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப்பெருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட நிகழ்ச்சியை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு உற்சவர் சன்னதியிலிருந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க அங்கி அலங்காரத்தில் சுவாமி தெய்வானையுடன் கருப்பணசாமி கோயிலில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் 5.45 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.
காலை 6.25 மணிக்கு முதல் ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன் வெள்ளை வீச, பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கிரிவலப் பாதையில் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
தேரின் முன் சிறிய சட்டத் தேரில் விநாயகர் முன்னே செல்ல, பின்னே சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட 5 அடுக்குகளில் உருவான பெரிய தேரில் கிரிவலப்பாதையில் எழுந்தருளினார். தேர் 10.50 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.