துடியலூர்: தேர்தல் அல்ல; பாதிக்கப்பட்ட பெற்றோருக்கான மன ஆறுதலே முக்கியம் என்று கொல்லப்பட்ட கோவை சிறுமியின் பெற்றோரைச் சந்தித்த பின் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூரையடுத்த பன்னிமடையில் கடத்திக் கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமியின் பெற்றோரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் வெள்ளியன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து விட்டு வந்துள்ளேன். தங்களுக்குரிய நீதி தாமதமாவதாக அவர்கள் கருதுகிறாரகள். இது கண்டிப்பாக தேர்தல் சமயத்திற்கான சந்திப்பு அல்ல. தேர்தல் இல்லாவிட்டாலும் இவர்களுக்காக நான் வந்திருப்பேன். இது அனைத்தையும் விட முக்கியமானது.
நான் இங்கு வந்திருப்பதே இந்த விஷயத்தைக் குறித்து நிறைய பேர் பேச வேண்டும் என்பதற்காகத்தான். தனது வீட்டுக்கு 20 அடி தொலைவிலேயே ஒருசிறுமி பாதுகாப்பாக விளையாட முடியாத சூழல் நிலவும் என்றால், இது கண்டிப்பாக தமிழகத்திற்கே அவமானம்தான். இதை களைய வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உள்ளது
இந்த சமயத்தில் தேர்தல் முக்கியம் அல்ல; பாதிப்புக்குள்ளான பெற்றோரின் மன ஆறுதலே முக்கியம். போலீஸ் இதில் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று நமபுகிறேன். இதற்காக விரைவில் டிஜிபியை சந்தித்து வேண்டுகோள் வைப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.