தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் வெற்றி ஆய்வுக்குரியது என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றது என்பது ஆய்வுக்குரிய விஷயம்.
அந்தத் தொகுதியில் பணம் தாராளமாக விநியோகிக்கப்பட்டதாகவும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குகளில் முரண்பாடு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
எனவே, இவை அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்துவது என்பதில் தவறு எதுவுமில்லை என்பதே எனது கருத்து என்றார் அவர்.