பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மால்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த ஆண்டில் வழக்கத்தை விட முன்னதாகவே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த மாத கடைசி வாரம் முதலே மாமல்லப்புரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் வெயிலின் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாள்களாக கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்த்தனர்.
குறிப்பாக கோடை விடுமுறைக் காலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் கூடுதல் எண்ணிக்கையில் வந்தனர். கோடை விடுமுறையின் கடைசி வார விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அவர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் சிறு வியாபாரிகளுக்கு அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்றது.
சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள ஐந்த ரதம், அர்ஜுனன் தபசு, கோவர்த்தன மண்டபம், வராக மண்டபம், ஆமை மண்டபம், வெண்ணை உருண்டைப்பாறை, பழங்கால கலங்கரை விளக்கம் மற்றும் நவீன கலங்கரை விளக்கம், கடற்கரைக் கோயில் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தனர். வெயிலில் சோர்ந்து போன சுற்றுலாப் பயணிகள் வெப்பத்தைத் தணிக்க கடலில் குளித்து மகிழ்ந்தனர். கடற்கரையில் இருந்த காவலர்களும், கடலோரக் காவல்படையினரும் கடலில் குளித்தவர்களுக்கு கடலின் ஆழம் குறித்து விளக்கினர்.
கடலில் வெகுதூரம் செல்ல வேண்டாம் என எச்சரித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.