மண்டபத்தில் குடியேற இருக்கும் ஒசூர் நாயகி: ஒசூர் நாயகி நடுகல் புதிய விவரங்கள்

தற்பொழுது அறியவந்த மண்ணுக்குள் புதைந்திருந்த கீழடுக்கில், வளமை வழிபாட்டுக்கு உரிய சின்னங்களான குத்துவிளக்கு, பூர்ணகும்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தினமணி இணையத்தளத்தின் தொல்லியல்மணி பகுதியில், சிறப்புக் கட்டுரைகள் பிரிவில் கடந்த 19.7.2018 அன்று ஒசூர் நாயகி: சிற்பத்தில் நிலைத்த தலைப்பலியில் முடிந்த ஈசனின் காதல் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டது.

அக்கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து சில ஆரோக்கியமான, போற்றுதலுக்குரிய செயல்கள் நடைபெற்று வருகின்றன. தெருவோரத்தில் அநாதையாக நிற்கும் இந்த அரிய தொல்லியல் முக்கியத்துவமுடைய நடுகல்லை முறைப்படி பாதுகாக்கும் முயற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தின் தலைவரும், கே.ஏ.பி. அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. கே.ஏ. மனோகரன் அவர்கள் முன்வந்துள்ளார்.

இதன் முதற்படியாக, 23.7.2018 அன்று மதியம் அவரது முன்னிலையில் தெரு ஓரத்தில் இருந்த ஒசூர் நாயகி நடுகல் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டது. அப்போது, அந்நடுகல்லில் மேலும் ஒரு சிற்ப அடுக்கு உள்ளது அறியப்பட்டுள்ளது.

நடுகல் புதிய காட்சிகளும் செய்திகளும்

நடுகல் வெளியே எடுக்கப்பட்ட பிறகு அது, இந்நாள்வரை கருதப்பட்டதுபோல் ஈரடுக்கு கொண்டதன்று, மூவடுக்கு கொண்டது என்பது புலனானது. இதனால் கீழடுக்கு என்று நம்பப்பட்ட நாயகியின் காட்சி இடம்பெறும் அடுக்கு மத்திய இரண்டாம் அடுக்காக அமைகிறது. தற்பொழுது அறியவந்த மண்ணுக்குள் புதைந்திருந்த கீழடுக்கில், வளமை வழிபாட்டுக்கு உரிய சின்னங்களான குத்துவிளக்கு, பூர்ணகும்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கீழடுக்கின் மத்தியில் ஒரு நல்ல வேலைப்பாடுகூடிய முக்காலி மீது பூர்ணகும்பம் ஒன்று நிரைந்து விரிந்துத் தொங்கும் மலர்ச்செடி, கொடிகளுடன் அதாவது கொடிக்கருக்கு இணைந்து காட்டப்பட்டுள்ளது. இதனை “கும்பலதா” என்று சிற்ப நூல்கள் குறிப்பிடும் பூர்ணகும்பத்தின் இருபுறமும் சிறப்பான வேலைப்பாடு அமைந்த குத்துவிளக்குகள் பக்கத்துக்கு ஒன்றாக வைக்கப்பட்ட காட்சி செதுக்கப்பட்டுள்ளது.  பூர்ணகும்பம் என்பது தாய்மை, வளமையை, செழிப்பைக் குறிக்கும் சின்னமாகும். அது தாயின் கருப்பையின் குறியீடு என்றும் குறிக்கப்படும். மேலும் சந்ததிப் பெருக்கத்துக்கும், செல்வ வளத்துக்கும் வணங்கப்படும் சின்னமாகவும் விளங்குவதாகும். பூர்ணகும்பம், சிற்பக் கலையில் சோழர் காலத்தில் இருந்து கோயில் கருவறையின் சுவர்களை அலங்கரிக்கச் செதுக்கப்படும் சின்னமாவும், விஜயநகர நாயக்கர் காலத்தில் சிறப்பான வடிவமைப்போடும், பல மடிப்புகள் கொண்டதாகவும், அழகான வேலைப்பாடுகள் கொண்டதாகவும், பஞ்சார அமைப்போடு இணைந்து கும்ப பஞ்சாரமாகவும் அமைக்கப்படும் சின்னமாகும். இங்கு நடுகல்லில் தனித்த கும்பம் முக்காலியில் காட்சிப்படுத்தியிருப்பது அரிதான சித்தரிப்பாகும்.    

ஒசூர் நாயகி நடுகல்: இதுநாள் வரை அறியாத மூவடுக்குக் காட்சி

திரு. கே.ஏ. மனோகரன்

இந்நடுகல்லை பாதுகாக்கும் முயற்சியை கையில் எடுத்துக்கொண்ட திரு. கே.ஏ, மனோகரன் அவர்கள் இது குறித்து கூறும்பொழுது, ஒசூர் நாயகி நடுகல்லின் சிறப்பு அறிந்து, அதனைப் பாதுகாக்கும் முகமாக கிருஷ்ணகிரி வரலாற்று மையம் மூலம் ஒசூர் நாயகிக்கு சிறப்பான மண்டபம் ஒன்றை அமைத்து அதில் நாயகியின் நடுகல்லை பாதுகாத்து வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு, தெரு ஓரத்தில் அநாதையாக இருக்கும் நடுகல்லை பாதுகாக்கும் வகையிலும், வழிபாட்டுக்குக் கொண்டுவருவதற்கும் அந்நடுகல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. முழுமையாகச் சேதமின்றி வெளியே எடுக்கப்பட்ட கல், மேலும் சில சிறப்பான செய்திகளை சிற்பங்கள் வழி தெரிவிக்கின்றது. முதலில் அது இவ்வளவு காலம் நம்பப்பட்டதுபோல் ஈரடுக்கு சிற்பத்தொகுப்பு நடுகல் அன்று; அது மூன்று அடுக்கு சிற்பத்தொகுப்பு என்பது இதன்மூலம் அறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று மையத்தின் மூலமாகவும், அதன் தாய் நிறுவனமான ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை மூலமாகவும், கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களின் வரலாற்றை முழுமையாக வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போதுவரை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் வரலாற்றுச் சிறப்புகளை வெளிப்படுத்தும் 15-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிடுள்ளது. தேசிய, மாநில அளவிலான 6 பெரிய வரலாற்றுக் கருத்தரங்கங்களையும் நடத்தியுள்ளது. தற்பொழுது தொல்லியல் முக்கியத்துவமுடைய அரிய நடுகற்கள், பாறை ஓவியங்கள், மேலும் பலவகையான வரலாற்றுக்கு முற்பட்ட, வரலாற்றுக்கால பண்பாட்டினை வெளிப்படுத்தும் தொல்பொருட்களை அறியும் பொருட்டு களஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை ஆவணப்படுத்தியும் வருகிறது.

கே.ஏ. மனோகரன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் (ஒசூர்)

இப்பொழுது கண்டறியப்பட்டுள்ள 15-ம் நூற்றாண்டின் சிற்பக்கலைக்கு சிறந்த உதாரணமாகவும், வளமை வழிபாட்டில் சிறப்பிடம் பெற்ற நடுகல்லை பாதுகாக்க மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இறைவன் மீது கொண்ட காதலால், தன் தலையை அரிந்து காணிக்கையாகிய பெண்ணின் அரிய நடுகல் இது. நடுகல் வழிபாடே மூதாதையர் வழிபாட்டுடன் வளமை வேண்டி மேற்கொள்ளப்படுவதாகும். இந்த வகையில் நாயகியின் கல்லில் பூர்ணகும்பமும் இடம்பெற்றுள்ளது. இது மக்கள் செல்வம் வேண்டி வழிபட எடுக்கப்பட்ட நடுகல்லாகவும் விளங்கியுள்ளது. இக்கல் போற்றப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. விரைவில் மண்டப வேலைகள் முடிந்து அதில் ஒசூர் நாயகி நடுகல் வைத்து பாதுகாப்பு செய்யப்படுவதுடன், வழிபாட்டுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்கிறார். 

கட்டுரை ஆசிரியர் தொடர்புக்கு: த. பார்த்திபன் - thagadoorparthiban@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com