நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் சரிந்ததையடுத்து, மணிமுத்தாறு அணை வியாழக்கிழமை மூடப்பட்டது.
தென்மேற்குப் பருவமழை நிகழாண்டு குறைந்ததையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மேலும், கடும் வெப்பம், மேற்குத் தொடர்ச்சி மலையில் வறட்சி காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 104.24 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 49 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 44 கனஅடி, ராமநதி அணைக்கு 21 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 5 கனஅடி நீர்வரத்து இருந்தது. கருப்பாநதி, குண்டாறு, வடக்குப் பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவை, பாசனத் தேவைக்காக பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைகளின் நீர் இருப்பை பொருத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்படுவதால் மணிமுத்தாறு வியாழக்கிழமை மூடப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து 850 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடனாநதி அணையிலிருந்து 65 கனஅடி, ராமநதி அணையில் 35 கனஅடி, குண்டாறு அணையில் 5 கனஅடி, அடவிநயினார் அணையில் 20 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணையில் 10 கனஅடி, கொடுமுடியாறு அணையில் 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தபோதிலும், பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் நீர்வரத்து கணிசமாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிகமாகக் காணப்பட்டது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 63.10 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 58 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் 47.20 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 47 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 24.77 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 30.87 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 52 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 11 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 10.95 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 16 அடியாக இருந்தது.