எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே தூங்கும்
வனக்கிளி அவளை இன்னும் மறக்கவே முடிய வில்லை!
நினைக்கையில் இனிக்கும் அந்த நெய்வாசக் குழலி இன்று
எனக்கொரு கவிதையானாள்; இதுதான் நான் கண்ட இன்பம் !
கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்
மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள் !
பன்னி நான் கேட்டபோது பராசக்தி வடிவமென்றாள் !
சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர் நகரம் என்றாள்
தந்திரம் அறிவாள், மெல்ல சாகசம் புரிவாள் - மின்னும்
அந்திவான் மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள் - நானும்
பந்தயம் போட்டுப் பார்த்துப் பலமுறை தோற்றேன் - என்ன
மந்திரம் போட்டாளோ என் மனதையே சிறையாய் கொண்டாள்.
-கவிஞர் கண்ணதாசன்
("வனவாசம்' எழதியதற்குப் பின்னர் எழுதிய கவிதை)