பெங்களூர் சாம்ராஜ் பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில், ஆண்டுதோறும், ஸ்ரீராம நவமியின்போது, ஒருமாதத்திற்கு பிரபலமான பாடகர்களின் கச்சேரிகள் நடக்கும்.
1939-ஆம் ஆண்டு, ராமசேவா மண்டலி என்ற அமைப்பை எஸ்.வி. நாராயணசுவாமி ராவ் என்பவர் தனது 14-ஆவது வயதில் துவக்கினார். இவர் 2000-ஆம் ஆண்டு காலமானார். இவருக்கு 4 மகன்கள், ஒரு பெண். 2005 -ஆம் ஆண்டு முதல் ஸ்ரீராம நவமி விழாவை கொண்டாடஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது.
இதன் தலைவராக 4-ஆவது மகன் வரதராஜ் என்பவர் இருந்து தொடர்ந்து நடத்திவந்தார். இவருடைய நடவடிக்கைகள், குடும்பத்தினருக்கு பிடிக்காததால், அறக்கட்டளையையே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.
நாராயண சுவாமி ராவின் மனைவி, 3 மகன்கள் மற்றும் மகள் ஓர் அணியாகவும், வரதராஜ் தனியாகவும், சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.
இந்த ஸ்ரீராம நவமி நிகழ்ச்சியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் பாடி வந்தவர் கே.ஜே.ஜேசுதாஸ். இதனால், குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை என தெரிந்ததும், இருவருடனும், சொந்த அக்கறை எடுத்து சமாதானம் செய்து பார்த்தார். ஆனால் இதற்கு இருவரும் சம்மதிக்கவில்லை.
அதனால் ஜேசுதாஸ் , ""இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி கச்சேரியில் பங்கு கொள்ளமாட்டேன்'' என அறிவித்துவிட்டார்.