அரசியல், சினிமா என மாறி மாறி பயணிப்பவர் டி.ராஜேந்தர். அன்றைய நாள்களில் இவரது இயக்கத்தில் வெளிவந்த "ஒரு தாயின் சபதம்', "என் தங்கை கல்யாணி', "சம்சார சங்கீதம்' உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் "வீராசாமி'. அவரே கதாநாயகனாக இந்தப் படத்தில் நடித்தார். இதன் பின் படங்கள் எதையும் அவர் இயக்கி நடிக்கவில்லை. கடந்த ஆண்டு வெளியான "கவண்' படத்தில் நடித்திருந்தார். கே.வி.ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் டி.ஆரின் நடிப்புக்கு பரவலான பாராட்டுக்கள் கிடைத்தன. இந்நிலையில், தற்போது மீண்டும் படம் இயக்கி நடிக்கும் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதில் பெண் தாதாவாக நமீதா நடிக்கிறார். ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாப் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தன்னுடைய பழைய பாணியில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் டி.ராஜேந்தரே கவனிக்க இருக்கிறார். டி.ஆரின். சொந்த நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.