"மொழி' படத்துக்குப் பின் ராதாமோகன் இயக்கத்தில் "காற்றின் மொழி' படத்தில் நடிக்கிறார் ஜோதிகா. இந்தப் படத்துக்கு வெகுவான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பட அனுபவம் குறித்து ராதாமோகன் பேசுகையில்...
""மொழி' படத்துக்குப் பின் ஜோதிகாவை வைத்து மீண்டும் இயக்கும் ஆசை இருந்தது. ஆனால் உடனடியாக அது கைக்கூடி வரவில்லை. திருமணத்துக்குப் பின் ஜோதிகா சினிமாவுக்கு வந்தவுடன் நிறைய பேர் எப்போது படம் ஆரம்பிக்கிறீர்கள் என கேட்டார்கள். அவரின் நடிப்புத் திறமைக்கு தீனி போடுகிற மாதிரியான கதை தயார் ஆகும் போது அவரை சந்திக்கலாம் என்றிருந்தேன். அப்போதுதான் ஹிந்தியில் "துமாரி சுலு' படத்தைப் பார்த்தேன். வித்யாபாலன் கதாபாத்திரத்தை தமிழில் ஜோதிகா செய்தால் எப்படியிருக்கும் என்றுத் தோன்றியது. ஜோதிகாவும் ஒப்புக் கொண்டார். ஜோதிகாவும் ஏற்கெனவே இந்தப் படத்தை ஹிந்தியில் பார்த்திருந்தார். அதனால் ஜோதிகா இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிப்பார் என்று நம்பினேன். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிப்பது சூர்யாவுக்கும் ரொம்பவே சந்தோஷம். இப்படித்தான் இந்தப் படம் உருவாகி வளர்ந்தது. நிச்சயம் இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்'' என்கிறார் ராதாமோகன்.