தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் படம் "கேஜிஎஃப்' . பிரஷாந்த் நீள் இயக்கத்தில் யாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக அறிமுகமாகிறார். வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
"பாகுபலி' படத்தை போன்று இந்திய அளவில் இப்படம் வெளியாகிறது. 1951- ஆம் ஆண்டு காலக்கட்டப் பின்னணியில் நடக்கும் இந்தக் கதை, தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிப்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மும்பையில் வளரும் கதாநாயகன், தங்கச் சுரங்கத்திற்குள் சென்று அங்கு அடிமையாய் இருக்கும் மக்களை காப்பாற்றுவதே கதை. ரவிபசூரூர் இசையமைக்கிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்துர் தயாரிக்கிறார்.
இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது. விஷால் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர். வெளியாகியுள்ள ட்ரெய்லர் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இணைய தளங்களில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 21-ஆம் தேதி படம் ஐந்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.