புத்திசாலி மாணவி!
ஒவ்வொரு பேச்சாளரும் தங்களது உரையை முடிக்கும்போது ஒவ்வொரு விதத்தில் நன்றி கூறி முடிப்பார்கள். மன்னார்குடி அருகிலுள்ள பெண்கள் கல்லூரி மாணவி மேடையில் பேசி முடிக்கும்போது, ரைஸ் கெல்லாருக்கு நன்றி என முடித்தார்.
ரைஸ் கெல்லார் யார்? எல்லாருக்கும் குழப்பம்.
அவரிடமே விசாரித்தபோது, பதில் கிடைத்தது. ரைஸ் கெல்லார் வேறு யாருமல்ல.. "மை'க்கை முதன்முதலில் கண்டு பிடித்தவர். எனவேதான், நாம் பேசுவதற்கு உதவி செய்த அவருக்கு நன்றி கூறினாராம். அந்த மாணவி.
- சி.ரகுபதி, போளூர்.
மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும்தான் முதன்முதலில் பசுமாடுகள் வளர்ப்பு பிராணியாக அங்கீகரிக்கப்பட்டன.
உலகில் முதன்முதலில் யானைகளுக்கு மருத்துவமனை தொடங்கப்பட்டது கேரளாவில்தான்.
சிட்டுக் குருவிகளுக்கு மிகவும் பிடித்தது மணல் குளியல். பொல, பொல வென்றிருக்கும் மணலுக்குள் தன் முகம் புதைய மூழ்கிக் குளிக்கும்.
"சதிலீலாவதி' படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர், என்.எஸ். கிருஷ்ணன், டி.எஸ். பாலையா ஆகியோர் துணை வேடங்களில் இப்படத்தில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகப்பெரிய அகழி பீகிங் அரசு மாளிகையைச் சுற்றி உள்ளது. இது 160 அடி அகலம் உடையது. இரண்டு மைல் சுற்றளவு உடையது.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
இங்கிலாந்தில் 1976-ஆம் ஆண்டு எம்.பி. ஆக இருந்த சர்ச்சில் ஸ்மித் என்பவர்தான் உலக எம்.பி.க்களிலேயே அதிக உடல் எடை கொண்டவராக இருந்தார். அவரது எடை 189 கிலோ.
தபால் துறையில் பயன்படுத்தப்படும் பின்கோடின் முதல் எண் மாநிலத்தையும், 2-ஆவது என் துணை வட்டத்தையும், 3-ஆவது எண் பட்டுவாடா செய்யும் மாவட்டத்தையும், இறுதி மூன்று எண்கள் குறிப்பிட்ட தபால் நிலையங்களையும் குறிக்கும்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளிலேயே மிக நீளமானது. 7-ஆவது தேசிய நெடுஞ்சாலைதான் (சஏ-7) வாரணாசியிலிருந்து நாகபுரி, பெங்களூர் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 2437 கி.மீ.
- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.
தேவலோக மரம்!
பனை மரத்திற்கு "தேவலோகமரம்' , "கற்பகத் தரு' என சிறப்பு பெயர்கள் உண்டு. இந்தியாவில் பதினைந்து கோடி பனைமரங்கள் உள்ளன. இதில் 60 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளன. இதனால்தான் தமிழ்நாட்டின் மாநில மரமாக பனைமரம் இருக்கிறது. பனையிலிருந்து உணவுப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் என 300-க்கும் மேற்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகிறது.
- ஆர். ராதிகா, விக்கிரமசிங்கபுரம்.
கன்பூஷியஸ் என்கிற சீன தத்துவமேதை ஏழு அடி உயரம் கொண்டவர்.
விநாயகரை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவபெருமானை மூன்றுமுறை வலம் வர வேண்டும்.
- த. நாகராஜன், சிவகாசி.