படம் வெளிவருவதற்கு முன்பே, அப்படத்தை பார்த்தப் பிரபலங்கள் வாயிலாக படம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்து வருவதுண்டு. அந்த வரிசையில் இடம் பிடிக்கிறது "மிக மிக அவசரம்'. "அமைதிப்படை 2', "கங்காரு' படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இப்படத்தை இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் பேசும் போது... ""இந்தக் கதைக்கான புள்ளி சென்னை பெரு நகரத்தின் சிறு சிறு பயணங்கள்தான். இடமும் வலமுமாக மறைந்த இரண்டு முன்னாள் முதல்வர்களின் வீடு இருந்த, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையை அவ்வப்போது கடப்பேன். ஜெமினி மேம்பாலம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அறிவாலயம் அருகில் என எங்கு பார்த்தாலும் காலை முதல் மாலை வரை உச்சி வெயிலில் கால் கடுக்க நிற்கும் பெண் காவலர்களைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் உறுத்தும். அவர்களின் வேலை, குடும்பப் பின்னணியில் ஒரு வலி இருந்தது. அதனுடன் அவர்களின் வேலை ஈடுபாடு என்பது ஆச்சரியம் அளிக்கும். அவர்களுடனான ஒவ்வொரு உரையாடலும் ஓர் அனுபவத்தைக் கொடுத்தது. அத்தனையையும் கொஞ்சமும் சிதறிடாமல் சேகரித்து எழுதப்பட்ட கதை இது. படம் பார்த்த பாரதிராஜா உள்ளிட்ட பலர் மனதாரப் பாராட்டியுள்ளனர். அதை திரையரங்குகளில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த மாத இறுதியில் படம் வெளியாகிறது. இதில் பெண் காவலராக நடித்திருப்பவர் "கங்காரு' படத்தில் நடித்த பிரியங்கா என்றார்.