கர்நாடகாவில் சிந்தனூர் விவசாய பொருள் விற்பனை மையத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் கெங்குரி சந்தையில் விற்பனையாகும் பழுப்பு நிற ஆடுகள் பிரசித்திப் பெற்றவையாகும். சிந்தனூர், கொப்பல், கங்காவதி, ராய்ச்சூர் ஆகிய பகுதிகளில் இனவிருத்தி செய்யப்படும் இந்த ஆடுகள் அனைத்தும் பழுப்பு நிறத்திலேயே இருப்பதால் "கெங்குரி' என அழைக்கப்படுகிறது. "குரி' என்றால் கன்னடத்தில் ஆடு என்று பொருள்.
திங்கள்தோறும் காலை 6 மணிக்கு தொடங்கும் இந்த சந்தை 3 மணிநேரத்திற்குள்ளாகவே முடிந்துவிடும். இங்கு விற்பனை செய்வதற்காக விடியற்காலையிலேயே 50 முதல் 60 சிறிய வண்டிகளில் ஒவ்வொன்றிலும் 40 முதல் 50 ஆடுகளும், சற்று பெரிய ஆடுகள் என்றால் 12 முதல் 15 ஆடுகள் என ஏற்றிவருவதுண்டு. அன்றைய தினம் சுமார் 250 முதல் 300 விற்பனையாகிவிடும். மூன்று முதல் ஐந்து மாதங்கள் என வளர்ச்சியடைந்தவுடன் விற்பனைக்கு வரும் ஆடுகள் ஒவ்வொன்றும் 14 முதல் 16 கிலோ எடை உள்ளதாக இருக்கும். இந்த மாநிலத்தில் இனவிருத்தி செய்யப்படும் மற்ற ஆடுகளைவிட இவை எடை கூடுதலாக இருப்பதால் ஒவ்வொன்றும் 4 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும்.
இடை தரகர்கள் இன்றி விவசாயிகளே ஆடுகளை விற்பதுண்டு. இந்த ஆடுகளை விவசாய குடும்பத்தில் உள்ள பெண்களே பராமரித்து வளர்க்கிறார்கள். இந்த சந்தையில் ஆடுகளை வாங்கி செல்ல பிற நகரங்களில் இருந்தும் நிறைய பேர் வருவதுண்டு.