துபாயில் கட்டப்பட்டுள்ள மிக உயரமான கட்டடமான "புர்ஜ் கலிபா' 160 மாடிகளைக் கொண்ட து. தரையில் இருந்து 2,722 அடி உயரம் கொண்ட இது உலகிலேயே மிக உயர்ந்த கட்டடம் ஆகும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் இருந்தாலும் கூடு கட்டுவதில் திறமைசாலிகளாக விளங்கியவைகள் விலங்குகள். அதிலும் குறிப்பாகப் பறவைகள், நாம் பார்த்து வியக்கும் இனங்களில் பறவை இனமே முதலில் இருக்கும். அவை சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் எளிதில் பறந்து செல்லும்.
நம் வீட்டின் மொட்டை மாடியில் வந்து அமரும் ஒரு பறவை, மறுநாளும் அதே இடத்தில் சரியாக வந்து நிற்கும். அது பறவைகளின் இயல்பு. அதே போல் இன்ன இடத்தில் இன்ன மரத்தில் அதிலும் குறிப்பாக இன்ன கிளையில் தான் கூட்டை கட்டி முடிக்க வேண்டும் என்ற நினைவாற்றல் பறவைகளிடம் மிக அதிகமாகவே உண்டு. நாம் அவற்றின் கூடு இருக்கும் இடத்தை மாற்றினாலும் அல்லது திசை திருப்பப்பட்டாலும் அது அதற்கு ஒவ்வாத ஒன்றாகிப் போகும்.
பறவைகள் கூடு கட்ட அடிப்படை காரணங்கள் உண்டு. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும், தங்களுடைய குஞ்சுகளைப் பாதுகாக்கவும், எதிரிகளிடமிருந்தும் மறைந்து வாழவும், சேகரித்து வரும் உணவுகளை வைத்து சாப்பிடவும், முட்டைகள் கீழே விழாமல் இருக்கக் கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. கட்டப்படும் கூட்டை அந்த மரத்தின் கிளை தாங்குமா தாங்காதா என்பதை பறவைகள் மிகச்சரியாக எடைபோட்டு விடும்.
எளிமையான கூடுகளை மட்டுமே கட்டும் பறவைகளும் நிறைய உண்டு. ஆனால் தூக்கணாங்குருவி இதிலிருந்து மாறுபட்டது. திறமையை வெளிக்காட்டவே அவை கூடு கட்டும். அதுவும் ஆண் குருவிகளே கூடு கட்டும். கூடு கட்டிமுடித்த பிறகு பெண் குருவி வந்து நோட்டமிடும். எந்த ஆண் குருவியின் கூடு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கிறதோ, எந்தக் கூடு தன்னைக் கவர்கிறதோ அந்தக் கூட்டிற்குரிய ஆண் குருவியோடு ஜோடி சேர்ந்து இனப்பெருக்கம் செய்யும்.
இதே போன்று bower bird என்ற குருவி இனம் தன்னுடைய கூட்டை மிக அழகாக அலங்காரம் செய்யும். ஆண் குருவி தான் இந்தக் கூட்டை கட்டும். அதுவும் பெண் குருவியைக் கவர்வதற்காகப் பல நிறங்களை கொண்டு தன்னுடைய கூட்டை வடிவமைக்கும். இது தான் குருவியின் சிறப்பம்சம். அதுவும் பூக்கள், இறகுகள், அழகான கற்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என பல நாட்கள் பல இடங்களில் சேகரித்து தன்னுடைய கூட்டை வடிவமைக்கும். இதற்காக அவை நீண்ட தூரம் பறந்து செல்லும். கூடு கட்டி முடித்ததும் பெண் பறவையை அழைத்து வந்து காட்டிய பின் இருவரும் ஒன்றாக வாழ்வார்கள்.
வட அமெரிக்காவில் வாழும் டழ்ஹண்ய்ங் க்ர்ஞ் இனம் (அனில் போன்ற தோற்றம் உள்ளது, அபார ஆற்றல் கொண்டது) ஒன்று பூமிக்கு அடியில் 100 ஏக்கர் அளவிற்குத் தங்களுடைய இருப்பிடத்தை அமைத்துள்ளன. அதாவது மனிதர்கள் போல் தூங்குவதற்கு தனி இடம், கழிவறை போன்றவற்றை அமைத்து வாழ்கின்றன. கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது தானே!
தெற்கு ஆப்பிரிக்காவில் வாழும் "சோஷியபிள் வைய்வர்ஸ்' என்ற பறவை இனம் நம்மூரில் உள்ள சிட்டுக்குருவி இனத்தைச் சேர்ந்தது. இது மரக்கிளையில் அடுக்குமாடி குடியிருப்பு போன்று தன்னுடைய இருப்பிடத்தை உருவாக்குகிறது. 4 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கூட்டில் 300 முதல் 400 பறவைகள் வாழலாம். இந்தக் கூடு விதவிதமான பொருட்களால் ஆனது. இதில் தனித்தனி பகுதிகள் ஏராளம் உள்ளன. அதாவது மென்மையான பகுதிகள் இறகுகளால் வடிவமைக்கப்பட்டவை. கடினமாக பகுதிகள் மரக்கிளையிலுள்ள குச்சிகளால் உருவாக்கப்பட்டவை. இந்தக் கூட்டிற்கு தனித்தனி நுழைவு வாயிலும் உண்டு. மற்ற எவையும் இதனுள்ளே அத்தனை எளிதில் நுழைந்துவிட முடியாது.
விலங்கினங்களுக்கு மோப்ப சக்தி அதிகம். பறவைகள் கிட்டத்தட்ட மோப்ப சக்தி அற்றவை. அறவே இல்லை என்று சொல்லுமளவு அவற்றின் மோப்பத்திறன் குறைவானது. ஆனால், பறவைகள் அதிர்வுகளை நன்கு உணரும். விலங்குகளால் அது முடியாது. சின்னச் சின்ன அதிர்வுகளையும் முன்கூட்டியே கணிக்கும் திறன் பறவைகளுக்கு மட்டுந்தான் உண்டு. உதாரணமாக பூகம்ப நேரங்களில் அவை முன்கூட்டியே தப்பிப்பதை கூறலாம். அழிந்த டைனோசர் இனத்திலிருந்தே பறவைகள் வந்ததாக அறிவியல் பூர்வமான ஓர் ஆச்சரியத் தகவலும் உண்டு.
நமக்கு ஒவ்வொரு செயலையும் தொழிலையும் கற்றுக் கொடுக்க ஒருவர் தேவைப்படுகிறார். ஆனால் யாருமே சொல்லிக் கொடுக்காமல், சிவில் இன்ஜினீயரிங் கல்லூரியில் கற்காமல் கூடு கட்டும் கட்டட கலை வல்லுநர்களாக பறவைகள் உள்ளன. இயற்கையைப் பாதுகாப்பதில் விலங்குகள், பறவைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.அதே போல் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது நம்முடைய முக்கியக் கடமையாகும்.
தகவல் உதவி: storyat every corner.com
-வனராஜன்