• பலகாரம் செய்ய எண்ணெய்யைக் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.
• தீபாவளி லேகியம் செய்யத் தெரியவில்லையென்றால், ஒரு கைப்பிடி டைமன் கற்கண்டுடன் மூன்று சுக்கு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், இரண்டு ஏலக்காய்ச் சேர்த்து மிக்ஸியில் போட்டுப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பவுடரை டீயில் போட்டுக் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.
• பட்ச்சணங்களுக்கு பெருங்காயப் பொடி போடுவதற்கு பதில், வேலை ஆரம்பிப்பதற்கு மூன்று மணி நேரம் முன், பெருங்காயத்தை வெந்நீரில் ஊறப் போட்டு, அந்த நீரை உபயோகிக்கலாம். தவிர, அனைத்து பட்சணங்களையும் ஒரே நாளில் செய்து விட முடியாது. அதனால், இந்த பெருங்காயத் தண்ணீர் மீந்து போய்விட்டாலும், பிரிஜ்ஜில் வைத்து, மறுநாளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
• அதிரசம் செய்ய, காலையில் பாகெடுத்து, மாலையில் அதிரசம் தட்டிப் போட்டால், மென்மையாக இருக்கும். இரவு பாகெடுத்து, காலையிலும் தட்டிப் போடலாம். அதிரசத்தின் சுவைக்கு இது தான் ரகசியம். பாகெடுத்த உடனே தட்டினால், கரகரவென்று இருக்கும்.
• உளுந்து வடைக்கு மாவை கிரைண்டரில் இருந்து எடுக்கும் போதுதான் உப்பு போட்டு, ஒரு அரைப்பு அரைத்து எடுக்க வேண்டும். முன்னதாக உப்பு சேர்த்தால், மாவு தண்ணீர் விட்டு போகும்.
- என். கலைச்செல்வி