அமிதாப் பச்சனின் மகளான ஸ்வேதா பச்சன் நந்தா மாடலாக 2016-லேயே மேடை ஏறிவிட்டார். எஸ்கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களின் குடும்பத்தில் மருமகளாக இருந்தாலும் ஸ்வேதா வணிக நிறுவனம் எதையும் தொடங்கவில்லை. புகழ் வெளிச்சத்திலிருந்து சற்று விலகி இருந்து வந்தாலும், ஸ்வேதா இந்த ஆண்டு ஃபேஷன் உலகில் புதுமைகளை அறிமுகப்படுத்த பல்வகை வடிவ ஆடைகளை ஆன்லைன் மூலம் விற்க ""M x S' நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளார். பருத்தி, செயற்கை இழை முதல் தோலால் உருவாக்கப்படும் நவீன ஆடைகள் வரை அசத்தும் டிசைன்களில் ஃபேஷன் சந்தையை ஆக்கிரமிக்க விற்பனையை செப்டம்பர் மாதம் அதிரடியாகத் தொடங்க உள்ளார். சிறுமிகள் முதல் பேரிளம் பெண்களுக்கான ஆயத்த உடைகள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.
புதிய வணிக முயற்சிக்கு விளம்பரம் வேண்டுமே.?
தனது ஆடைகளின் விளம்பரத்திற்காக மாடல்களைத் தேடி ஸ்வேதா அலையவில்லை. மாடலாக தனது மகளும், அமிதாப் பச்சனின் பேத்தியுமான நவ்யா நவேலி நந்தாவை களம் இறக்கியிருக்கிறார். கூடவே ஸ்வேதாவும் மகளுடன் அவ்வப்போது இணைந்து மாடலிங் செய்துள்ளார். ஸ்வேதா, நவ்யா இணைந்து நிற்கும் படங்களில் "மாடலிங்கில் மின்னுவது.. நீயா நானா' என்று கேட்கிற மாதிரி அமைந்து விட்டிருக்கிறது.
இதைப் புரிந்து கொண்ட அமிதாப் "எதற்கு வம்பு' என்று நினைத்தாரோ என்னவோ மகளையும் பேத்தியையும் ""சூப்பர்ர்ர்ர்ர்.... அளவில்லாத அன்பும் ஆசிர்வாதங்களும்... மகளுக்கும் மகளின் மகளுக்கும்..'' என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
இந்த மாடலிங் செய்ய ஸ்வேதா மகள் நவ்யாவுக்கு "ஊதியமாக என்ன அன்பளிப்பு செய்தார்' என்று கேட்டதற்கு, கிடைத்த பதில் என்ன தெரியுமா?
""உருளைக் கிழங்கு சிப்ஸ் கொடுத்து நவ்யாவை மாடலிங் செய்ய வைத்தேன்'' அழகு மிளிரும் நவ்யா மாடலிங் செய்யத் தொடங்கிவிட்டதால் விரைவில் திரைப்படங்களிலும் நடிப்பார் என்று பேச்சு அடிபட ஆரம்பித்துவிட்டது, அப்படி நவ்யா நடிக்க வந்தால் ஊதியம் உருளைக் கிழங்கு சிப்ஸ்களாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.