தேவையானவை:
ப்ரெட் துண்டுகள் - 6
வெங்காயம் - 1
தக்காளி - 3
நறுக்கிய இஞ்சி, பூண்டு -1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தக்காளி சாஸ் -2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சர்க்கரை -1 தேக்கரண்டி
வினிகர், உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை: ப்ரெட் துண்டுகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின்னர், தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெட்டி வைத்துள்ள ப்ரெட் துண்டுகளைப் போட்டு வறுத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பின்னர் மிளகாய்வற்றல் , வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு, சர்க்கரை, கலந்து தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இப்போது வறுத்து வைத்த ப்ரெட் துண்டுகளை சேர்த்து லேசாக புரட்டி இறக்கவும். சுவையான "பிரெட் சில்லி மசாலா' ரெடி .
தேவையானவை:
ரவை - 250 கிராம்
சர்க்கரை - 1 கிண்ணம்
அரை மூடி தேங்காய் - துருவியது
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 1தேக்கரண்டி
செய்முறை: ரவையை வாசனை வரும்வரை நன்கு வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின்னர் ரவை சூடு ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக ரவையில் தெளித்து பிசறிக் கொள்ளவும். பின்னர், புட்டு வேக வைக்கும் குழாயில் சிறிது ரவை, சிறிது தேங்காய் என குழாய் கொள்ளும் அளவு வைத்து வேகவிடவும். புட்டு வெந்ததும் எடுத்து சர்க்கரை, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து பரிமாறவும். சுவையான "ரவா குழல் புட்டு' தயார்.
தேவையானவை:
இட்லி - 6
மைதா மாவு - 1 மேசைக்கரண்டி
கடலை மாவு - 1 மேசைக்கரண்டி
சோளமாவு - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
முந்திரி - 8
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு.
வெங்காயத்தாள் - சிறிது
செய்முறை: இட்லியை நீளத் துண்டுகளாகவோ, அல்லது சதுரமாகவோ வெட்டிக் கொள்ளவும். பின்னர், அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, கடலை மாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளவும். அத்துடன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி அரைத்து சேர்க்கவும். பின்னர், தக்காளி சாஸ், உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இட்லித்துண்டுகளை கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் தூவி சுடச்சுட பரிமாறவும். சுவையான "இட்லி மஞ்சூரியன்' தயார்.
தேவையானவை :
இட்லிமாவு - 4 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லித்தழை - சிறிது
செய்முறை: இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, சோம்பு, உளுந்து, தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் வற்றியதும் மசாலாவுடன் இட்லிகளைச் சேர்த்து நன்கு புரட்டி கொத்துமல்லித்தழை தூவிப் பரிமாறவும். சுவையான மசாலா மினி இட்லி தயார்.