சமையல்... சமையல்!

நெய் சோறு, பஹாரா சோறு, தாராபுரம் பேனியான், ஓட்டையப்பம் 

நெய் சோறு

தேவையானவை:
சீரக சம்பா அரிசி - 1 கிண்ணம்
தக்காளி - 1 பெரியது
பெரிய வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 3
தயிர் - கால்கிண்ணம்
பிரியாணி இலை - 2
கிராம்பு - 5
ஏலக்காய் - 3
சீரகம் - சிறிதளவு
புதினா - ஒரு கைபிடி அளவு
கொத்துமல்லி - இரண்டு கைபிடி அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
திராட்சை, முந்திரி - 100 கிராம்
சமையல் எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - தேவைக்கேற்ப 
செய்முறை: வாணலியில் 2 தேக்கரண்டி நெய்விட்டு, திராட்சை, முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு குக்கரில் 3 மேசைக்கரண்டி நெய் மற்றும் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விடவும். சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் , சீரகம், பிரியாணி இலை போட்டு வதக்கவும். பின்னர், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கியவுடன். இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும். பின்னர், 1 கிண்ணம் அரிசிக்கு ஒன்றரை கிண்ணம் தண்ணீர் ஊற்றவும். பின்னர், அரிசியை களைந்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மூடி 3 விசில் விடவும். பிறகு குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி விசில் அடங்கியதும் , வறுத்து வைத்து முந்திரி, திராட்சை, பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும். சுவையான நெய்சோறு தயார்.

பஹாரா சோறு

தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 2
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 2
பச்சை மிளகாய் - 5
புதினா, கொத்துமல்லி - 1 கைப்பிடி
கிராம்பு - 6
ஏலக்காய் - 3
தயிர் - 50 கிராம்
சமையல் எண்ணெய் - 200 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் பெரிய வெங்காயத்தையும் சேர்த்து கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கும்போது. தக்காளி, புதினா கொத்துமல்லி சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து, தயிர் சேர்க்கவும். பின்னர் ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னேகால் அளவில் தண்ணீரை ஊற்றி, அரிசியைப் போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடிவிடவும். 2 விசில்விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் சாதத்தை எடுத்து பரிமாறவும். 

தாராபுரம் பேனியான்

தேவையானவை:
மைதா மாவு - 1 கிண்ணம்
சர்க்கரை - 200 கிராம்
வெண்ணெய் - சிறிதளவு
எண்ணெய்- அரை லிட்டர்
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 1சிட்டிகை
செய்முறை: மைதா மாவுடன் சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு , சிறிதளவு நெய் சேர்த்து பூரி மாவுப் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் வெண்ணெய்யுடன் 2 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மைதா மாவை பூரிகளாக திரட்டவும். அதன்மீது வெண்ணெய்யைத் தடவவும். பின்னர், சிறிய கத்தியால் நீட்டு வாக்கில் துண்டுகளாக்கி, அதனை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, உருட்டி மீண்டு லேசாக தேய்க்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூரியை சுட்டு எடுக்கவும். அதன் மீது சர்க்கரையை லேசாக தூவவும். சுவையான பேனியான் தயார்.

ஓட்டையப்பம் 

தேவையானவை:
பச்சரிசி மாவு - கால் கிலோ 
சாதம் - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1கிண்ணம்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை: மிக்ஸியில் பச்சரிசி மாவை தண்ணீர் விட்டு அரைக்கவும். பின்னர், தேங்காய்த் துருவல், சாதம் இரண்டையும் சேர்த்து அரைக்கவும். பின்னர், முட்டையை நன்கு அடித்து, 1 சிட்டிகை சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர், தோசை தாவாவில் சிறிது மாவை எடுத்து ஊற்றி தோசை சுடுவது போன்று சுட்டெடுக்கவும். ( ஒட்டாடை செய்வதற்கென்றே ஒருவகையான மண் சட்டி உள்ளது. அதிலும் செய்யலாம்) சுவையான ஓட்டையப்பம் ரெடி. 
- பாத்திமா பீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com