""சில வாரங்களுக்கு முன்பு டோர்மேட் தயாரிக்கும் மிஷின் பற்றியும், அதன் விவரம் மற்றும் அதனை தயாரிப்பவர்கள் விவரங்களைத் தெரிவித்து இருந்தேன். அது பற்றி கூடுதல் விவரம் தெரிவிக்க வேண்டும் என பலரும் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கின்றனர். இதற்காக சேலத்தில் டோர்மேட் மிஷின் தயாரிக்கும் கூடத்திற்கு சென்ற வாரம் சென்று வந்தேன். சிறுதொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக உள்ள பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சுலபமான தொழில் இது. இதற்கு வீட்டில் 5 க்கு 8 அடி இடம் இருந்தால் போதுமானது.
மேலும், பழகிய பின்னர் ஒரு நாளைக்கு சராசரியாக, வீட்டு வேலைகளுக்கு இடையே 50 மேட்கள் தயாரிக்கலாம். இது ஒரு வகையில் நெசவுத் தொழிலைச் சார்ந்ததுதான்.
இதற்கு மின்சாரம் ஏதும் தேவையில்லை. இந்த மிஷின்களைப் பொருத்தவரை, குறைந்த விலை, அதிக விலை என இரண்டு மாடல்கள் உள்ளன. அதாவது 300 மேட் தயாரிக்கும் அளவுக்கு பாவு நூல் போட்ட தறி விலை குறைவு, இதையே 1000 மேட் தயாரிக்கும் அளவுக்கு பாவு நூல் போட்டால் அதன் விலை அதிகம். தற்போது 150 மேட் செய்யும் அளவிற்கும் தறி மிஷின் உள்ளது. மேலும், கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிக்கு ஏற்றார் போல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தறியும் விற்பனைக்கு வந்துவிட்டது. (இது சாதாரண இயந்திரத்தை விட விலை சற்று கூடுதலாக இருக்கும்). குறைந்தபட்சம் ரூ. 13,000 இருந்தால் போதுமானது. இதற்கான தேவை எப்போதும் உள்ளதால் எந்த காலத்திலும் விற்பனை பாதிக்கப்படாத தொழில் இது. சிலர் முதலில் டோர் மேட் தயாரிக்கும் பயிற்சியை எடுத்துக் கொண்ட பின்னர் இதனை தொழிலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால், எங்கள் பயிற்சி நிலையத்திலேயே பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.
இந்த கட்டுரையைத் தொடர்ந்து படித்து வரும் கும்பகோணம் அருகில் கொற்கை என்னும் ஊரைச் சேர்ந்த வாசகி அமுதா என்பவர் தனது வீட்டில் தற்போது கால் மிதியடி செய்யக் கூடிய இயந்திரத்தை அமைத்து கால் மிதியடி தயாரிப்பிலும் இறங்கிவிட்டார். அவரது முயற்சிக்கு பாராட்டுகள்! சரி, இந்த வாரம் என்ன செய்வது என்று பார்க்கலாம்'' என்கிறார் சுய தொழில் ஆலோசகர் உமாராஜ்:
கிளிஞ்சல் கைவினை பொருட்கள் தயாரிப்பு:
""கிளிஞ்சல் என்றாலே பீச்சில் நாம் தேடித்தேடி சேகரிப்போமே அதேதான். இது மொத்தவிலை கடைகளில் அரை கிலோ, 1 கிலோ என விற்பனைக்கு கிடைக்கும். அதை வாங்கி நம் கற்பனைக்கு ஏற்றாற்போல் வடிவில் தயாரிக்கலாம். அதாவது, கடைகளில் பொம்மைகள் வாங்கி வந்து அதற்கு பெரிதாக உடை அணிவிப்பது, பூந்தொட்டி போன்று செய்து பொம்மைகளை நடுவில் வைத்து கிளிஞ்சல்கள் சுற்றி வைப்பது, மரத்தின் நடுவே காளான் வளர்ப்பு போன்று, குருவி என கற்பனைக்கு ஏற்றவாறு வடிவம் கொடுக்கலாம். இதற்கு முதலீடு பெரிதாக தேவையில்லை. ரூ.1500 இருந்தால் போதும். இதற்கு முக்கியமாக கிளிஞ்சல்கள், ஒட்டுவதற்கு க்ளு கன் தேவை. பிறகு சின்ன சின்ன பொம்மைகள், பொம்மை மரங்கள் என வாங்கி நிறைய கைவினைப் பொருட்கள் தயார் செய்யலாம். மேலும், நிலைப்படியில் தொங்கும் தோரணம், முகம் பார்க்கும் கண்ணாடியாகவும் வேண்டிய வடிவத்தில் தயாரிக்கலாம். இவற்றை பேன்சி ஸ்டோர், கிராப்ட் கடைக்காரர்கள் வாங்கிக் கொள்வார்கள். மேலும் நவராத்திரி நேத்திலும் நிறைய விற்பனை செய்யலாம். அதுபோன்று கண்காட்சிகளில் கலந்து கொண்டும் விற்பனை செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும்'' என்றார்.