பள்ளியில் சமூக ஆர்வலர்கள் சிலர் வந்தனர். கலெக்டர், மற்றும் முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர். சுற்றுச் சூழல், மற்றும் புவிப் பாதுகாப்பு பற்றிய சொற்பொழிவு நடந்தது. மரங்களின் அவசியம் பற்றியும், அவைகள் வழங்கும் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் சொற்பொழிவு நடந்தது. முடிவில் மாணவர்களுக்கு பல மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
ஐந்தாறு மரக்கன்றுகளுடன் வீட்டை நோக்கி நடந்தான் மணி. மணியும் அவனது தாயும் வாடகைக்கு ஒரு குடிசை வீட்டில் இருந்தார்கள்.
மணியின் அம்மா, ""மணி,....என்னடா இது மரக்கன்றுகள்... கையிலே?'' என்று கேட்டாள்.
""நம்ம குடிசையைச் சுத்தி இருக்கிற வேலியோரமா சாலை ஓரத்திலே நடலாம்னு கொண்டுவந்தேம்மா''
""என்ன மணி, உனக்கு நம்ம சூழ்நிலை தெரியாதா?....யாராவது இருபது ரூபா கூட வாடகை குடுக்கறதா சொன்னா வீட்டுச் சொந்தக்காரர் நம்மை காலி பண்ணடச் சொல்லுவார். உடனே நாம் மூட்டை, முடிச்சைத் தூக்கிக்கிட்டு ஓடணும்.....நாம் போயிட்டா செடிக்கெல்லாம் யார் தண்ணி ஊத்துவாங்க?....''
""என்னம்மா நீங்க?...... சாலை ஓரமா வெச்சு நாம பாட்டுக்கு தண்ணி ஊத்துவோம்!..... அது பாட்டுக்கு வளரட்டும்!....வீட்டைக் காலி பண்ணும் சூழ்நிலை வந்தா என்ன?....அவங்க தண்ணி ஊத்துவாங்க....
அதைப்பத்தியெல்லாம் நாம கவலைப்படணுமா என்ன? முடிஞ்ச வரைக்கும் தண்ணிய ஊத்தி வளர்ப்போமே....அசோக மன்னர் சாலையோரத்திலே மரங்களை வளர்த்து மக்களுக்கு நன்மை செய்தார்னு சரித்திர புத்தகத்திலே படிச்சேன்மா.... அது மாதிரி நாம நடற செடியும் வளர்ந்து மரமாகி எல்லோருக்கும் நிழல் கொடுக்கறது மட்டுமில்லாம மழையை வரவழைக்கவும் பயன்படும்....ஆடு மாடு மேயாம இருக்க இந்த மரக்கன்றுக்கு வேலி கட்டணும்...'' என்று கூறிவிட்டு வேலி கட்டுவதற்காக பொருட்களை ஆர்வமாக சேகரிக்கத் தொடங்கினான் மணி.
"" உன்னோட சுயநலமில்லாத மனசை இப்ப புரிஞ்சிக்கிட்டேன்....வா....நானும் உனக்கு உதவி செய்யறேன்...'' என்று கூறிவிட்டு அருகில் இருந்த கிணற்றிலிருந்து நீரை இறைக்கத் தொடங்கினாள் மணியின் அம்மா!