நான் ஒரு பள்ளி ஆசிரியை. ஒரு நாள் காலை 7.30 க்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் சேர்ந்து நான் பணி புரியும் பள்ளியில் படிக்கும் மாணவிகளும் பயணம் செய்தனர். திடீரென்று ஒரு மாணவி ஏதோ மறந்து விட்டதைப் போல் தலையில் லேசாக தொட்டுக்கொண்டாள்....பிறகு நடத்துனரிடம், அவருடைய செல்ஃபோனைக் கேட்டாள். நடத்துனர், கொடுக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். பின்பு அந்த மாணவி சுமார் நாற்பது வயதிற்குமேல் இருக்கும் ஒருவரிடம் கேட்டாள். அவரும் மறுத்துவிட்டார்.
பின் சீட்டில் அமர்ந்திருந்த நான் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த மாணவியை என் அருகில் கூப்பிட்டேன். அவள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை நான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
""நீ எதுக்காக எல்லோர் கிட்டேயும் செல்போன் கேட்டுக்கிட்டு இருக்கே?....''
""இன்னிக்கு புறப்படும்போது ஒரு நோட்டுப் புத்தகத்தை மறந்திட்டேன் டீச்சர்!....அதை அம்மாகிட்டே சொல்லி பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வரச்சொல்லலாம்னு..... கைபேசியை சிலரிடம் இரவல் கேட்டேன்...''
""சரி, சரி,.....இந்தா என் ஃபோன்லே அம்மாவைக் கூப்பிட்டுப் பேசு!....''
அவள் அம்மாவிடம் பேசினாள். அவள் முகத்தில் கவலை குறைந்தது.
நான் அவளிடம்,""உன் பேர் என்ன?'' என்று கேட்டேன்.
""ராஜேஸ்வரி''
""எத்தனாவது படிக்கிறே?''
""பத்தாவது...''
""இதோ பார்....இந்த மாதிரி முன்பின் தெரியாதவங்க கிட்டே செல்போன் கேட்கிறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா?''
அவள் பதில் பேசாமல் முழித்தாள்.
இதோ பார் ராஜேஸ்வரி,......நீ யார் கிட்டே பேசறயோ, அவங்க கிட்டே உன் வீட்டு நம்பர் அனாவசியமா பதிவாயிடும்....நல்ல வேளையாக அந்த இருவரும் இல்லைன்னு சொல்லிட்டாங்க....நீ பெண் குழந்தை....பதிவான நம்பர்லேயிருந்து உங்க வீட்டைத் தொடர்பு கொண்டு ஏதாவது தொல்லை கொடுக்கலாம் இல்லையா..... ஏன் உன்னையே தொடர்பு கொண்டு தொல்லை
தரலாம்.... நீ அண்ணன், தம்பி, தாய், தந்தை போல் மதித்து வெகுளியா உதவி கேக்கிறே....அது சில சமயங்களில் விபரீதமாகிவிடும்.... நாமதான்
ஜாக்கிரதையா இருக்கணும்!....சரியா?...இதைவிட நோட்புக்கை மறந்துட்டேன்னு டீச்சர்கிட்டேயே உண்மையைச் சொல்லிடலாம்''
ராஜேஸ்வரி தன் தவற்றை உணர்ந்து கொண்டாள்.
இது மாணவிகளுக்கு மட்டுமில்லை....மாணவர்களுக்கும்தான். டென்ஷன், அவசரம் வேண்டாம். பள்ளிக்குப் போகுமுன் சரியாக அன்றைய தேவையான பொருட்களை அட்டவணையைப் பார்த்து எடுத்துச் செல்லுங்கள். பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். நன்கு படித்து, நல்ல மதிப்பெண் வாங்குங்க....அதுதானே ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி!....
வாழ்த்துக்கள்!