அன்று தினேஷ் படம் வரைந்து கொண்டிருந்தான். அவன் வரைந்த படத்தில் அழகிய பூங்காவும், பல வண்ணப் பூக்கள் நிறைந்த செடிகளும் இருந்தன. பூக்களுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் தோன்றியது.
தண்ணிக்கு கலரே இல்லை!..... ஆனா தண்ணி ஊத்தினா எப்படி இவ்வளவு கலர், கலரா பூக்கள் வருது?
உடனே தன்அப்பாவிடம் சென்றான்.... ""அப்பா!... இந்தப் பூவெல்லாம் எப்படி ஒவ்வொரு கலர்ல இருக்கு?.... பூவுக்கெல்லாம் யார் கலர் கொடுக்கிறாங்க?'' என்றான். அவன் அப்பாவுக்கு பதில் கூறத் தெரியவில்லை.
நேரே அம்மாவிடம் சென்றான். அதே கேள்வியைக் கேட்டான்.... ""சாமிதான் கலர் குடுக்குறார்!...'' என்றார் அம்மா.
""எப்படிம்மா குடுக்குறார்?''
""சும்மா என்னைத் தொந்தரவு செய்யாதே!.... போ!.... போய் விளையாடு!...''
தினேஷ் பாட்டியிடம் சென்று அதே கேள்வியைக் கேட்டான். பாட்டி அதற்கு ஒரு கதை சொன்னாள்.
"ஆதி காலத்துலே பூவெல்லாம் நிறமே இல்லாம இருந்ததாம்!.... எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து கடவுள்கிட்டே வரம் கேட்டதாம்!.... கடவுள் உடனே, ""உங்களுக்கு என்ன வண்ணம் பிடிக்குமோ அந்த வண்ணத்தை எடுத்துக்குங்க!...'' ன்னு சொன்னாராம்!....ரோஜாவும், தாமரையும் கடவுளுடைய சிவந்த உள்ளங்கைகளைப் பார்த்து அந்தக் கலரை எடுத்துக் கொண்டனவாம்!.... மல்லிகை, முல்லை, நந்தியாவட்டை எல்லாம் கடவுளுடைய வெள்ளை டிரெஸ்ûஸப் பார்த்து அதே வெள்ளை கலரை எடுத்துண்டுதாம்!.... கடவுளுக்குப் பக்கத்துலே இருந்த சூரியனைப் பார்த்து சூரியகாந்தியும் சாமந்தியும் மஞ்சள் கலர்லே மாறிடுச்சாம்!.... இப்படி ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு கலர்லே இருக்கு!'' என்றார். தினேஷுக்கு பாட்டி சொன்ன கதையில் திருப்தி இல்லை....
யாரிடம் கேட்கலாம்?.... சட்டென்று அவனுக்குப் பக்கத்து வீட்டு முரளி அண்ணாவின் நினைவு வந்தது!... அவரிடம் சென்றான். ""அண்ணா!.... ஏன் ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு கலர்லே இருக்கு?...பூவுக்கெல்லாம் யார் கலர் குடுக்கறாங்க?'' என்று கேட்டான்.
""ரொம்ப நல்ல கேள்வி தினேஷ்!... அதுக்கு முன்னாடி நான் உன் கிட்டே ஒரு கேள்வி கேட்கறேன்!... நம்ப குமாருடைய கண் என்ன கலரில் இருக்கும்? ''
""லேசா நீலக் கலரில் இருக்கும் அண்ணா!''
"" சரி, நம்ம சவிதாவுடைய தலை முடி என்ன கலரில் இருக்கும்? ''
"" லேசா பிரெளன் கலரில் இருக்கும்!''
"" சரி, தினேஷ்!.... எல்லாக் காய்கறிகளும் ஒரே நிறத்தில் இருக்கா?...''
"" இல்லேண்ணா!.... ஒவ்வொண்ணும் ஒரு கலர்லே இருக்கு!...''
""அதைப் போலத்தான் ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு கலர்லே இருக்கும்!... இலைகள் எல்லாம் க்ளோரோஃபில் அப்படிங்கிற நிறமிப் பொருளாலே பச்சைக் கலரில் இருக்கு!.... அதே மாதிரி, "ஆந்தோசையானின்ஸ்' அப்படிங்கிற நிறமிப் பொருளாலே பூக்கள் வெவ்வேறே கலர்லே இருக்கு!.... கேரட், தக்காளி போன்ற காய்கறிகளில் "கரோட்டினாய்ட்ஸ்' என்கிற வேதிப் பொருள் இருக்கறதாலே அதெல்லாம் ஆரஞ்சு, மற்றும் சிவப்புக் கலர்லே இருக்கு!...''
""ஓ!.... அப்போ வேதிப் பொருட்களாலேதான் இந்தக் கலர் மாற்றமா?....எனக்கு இன்னொரு சந்தேம் இருக்கு அண்ணா!.... ஏன் சில பூக்கள் மட்டும் பளிச்சுன்னு பிரைட் கலர்லே இருக்கு?.... சில பூக்கள் டல் கலர்லே இருக்கு?...''
""வெரி குட்!.... இது ரொம்ப முக்கியமான கேள்வி தினேஷ்!....தாவரங்கள் தன்னுடைய இனத்தைப் பெருக்குவதற்காக பூக்கள் படைக்கப்பட்டன. அடர்ந்த வண்ணம் கொண்ட பூக்களைத் தேடித்தான் பூச்சிகளும், வண்டுகளும் வரும். அந்தப் பூக்களில் இருக்கிற தேனை அவை உறிஞ்சிக் குடிக்கும்!... அப்பொ மகரந்தச் சேர்க்கை நடைபெறும்!.... இதனாலே அந்தப் பூ காயாக மாறி, கொஞ்ச நாள்லே பழமா மாறிடும்!.... இப்படிப் பளிச்னு அடர்ந்த வண்ணத்துலே இருக்கிற பூக்களும் நல்ல வாசனை உள்ள பூக்களும் கனியாக மாறும்பொழுது அவை சாப்பிடக் கூடியதாக நல்ல சுவை மிக்கதா இருக்கும்!..... ஆனால் சில பூக்களுக்குக் காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடக்கும்!.... அந்த மாதிரிப் பூக்களைத் தேடி எந்தப் பூச்சியும் வராது!... அப்படிப்பட்ட பூக்கள் ரொம்ப டல்லான வண்ணத்துலேதான் இருக்கும்!.... இப்படி டல்லான வண்ணம் கொண்ட பூக்களிலிருந்து உருவாகும் காய்கள் பெரும்பாலூம் சாப்பிட முடியாதவையாக இருக்கும்!...''
""பல பூக்கள் காயாக மாறாமல் இருக்கே அண்ணா?....அவைகளால் நமக்கு என்ன பயன்?''
""அந்த மாதிரிப் பூக்கள்லேதான் மகரந்தத்தூள் அதிகமா இருக்கும்.... அந்த மகரந்தத்தூள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்!.... இப்ப உன் சந்தேகம் தீர்ந்ததா?...''
""தேங்க் யூ அண்ணா!....நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்!.... முக்கியமா ஒரு வேலை இருக்கு!''
""அப்படி என்ன முக்கியமான வேலை?''
""என் நோட்புக்குலே சூரிய காந்திப் பூவையும், தாமரைப் பூவையும் வரைய மறந்து போயிட்டேன்!.... அதை வரையணும்! '' என்றான்.