சங்க இலக்கியத்தின் மாண்பு
முனைவர் அ.தட்சிணாமூர்த்தி எழுதிய இன்றியமையாதது என்கிற கட்டுரையில், முக்கியம் என்ற வடசொல்லைத் தவிர்ப்பதற்காக இன்றியமையாதது என்கிற தனித் தமிழை உணர்த்துவதற்காக நற்றிணையின் முதல் பாடலையும், வள்ளுவரின் நீரின்று அமையாது உலகெனின் என்கிற திருகுறளையும் எடுத்துக்காட்டி விளக்கியிருந்தது சங்க இலக்கியத்தின் தனித்தமிழின் மாண்பை வெளிப்படுத்தியது.
எஸ். பரமசிவம், மதுரை.
சிறந்த ஆய்வு
காவலர் ஈகை பெரிதா? பாவலர் ஈகை பெரிதா? என்கிற ஆய்வுக் கட்டுரையைப் புலவர் தா.குருசாமி தேசிகர் நன்கு ஆய்வு செய்து எழுதியிருந்தார். கலிங்கத்துப்பரணியின் பாடல்களை ஒப்பு
நோக்கிய விதம் பாராட்டத்தக்கது.
இராம.வேதநாயகம்,
வடமாதிமங்கலம்.
தினமணிக்குக் கிடைத்த பரிசு!
இந்த வாரம் பகுதியில் கலாரசிகன், முனைவர் பெ.சுபாசு சந்திரபோசுவின் மகத்தான பேருரைகள் நூலில் பிரபலங்கள் பலருடைய செய்திகளைத் தொகுத்துக் கொடுத்திருந்தாலும், சிலருடைய வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகள் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் நயமாக எடுத்துரைத்து, ஆலோசனை வழங்கியிருக்கிறார் என்றால், அவரது புத்தக வாசிப்பு ஈடுபாட்டையும், புத்தகம் எழுதுவோர் மேலும் சிறப்புற வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தையும் பாராட்டியே ஆகவேண்டும். தினமணிக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு, கலாரசிகன்!
டி.வி. கிருஷ்ணசாமி,
நங்கைநல்லூர்.
அருமையான ஒப்பீடு
இந்த வாரம் பகுதியில், பரிமளா தேவி என்பவரின் ஹைக்கூ கவிதையுடன், ஆங்கிலக் கவிஞர் பைரனின் மூன்றுவரிக் கவிதையைக் கலாரசிகன் தேர்ந்தெடுத்து ஒப்பிட்டு எழுதி இருந்தது அருமை!
ஜே.மகரூப், குலசேகரன்பட்டினம்.