பழமொழி நானூறு
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது. (பாடல்-62)
சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகாற்சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டுவந்து அரசுரிமையை எய்துவித்ததால், சிறந்த பொருள்களை விரும்பினும் விரும்பாதொழியினும், அடைதற்குரியவாய் நின்ற நன்மைகள், அவனைஅடையாது நிற்றல் இல்லை. (க-து) தமக்கு வரவேண்டிய நன்மைகள் வந்தே தீரும். "உறற்பால தீண்டா விடுதல் அரிது' என்பது பழமொழி.